காஷ்மீர்:கட்டுப்பாடுகளை தளர்த்தி தடுப்பு காவலில் உள்ளோரை விடுதலை செய்ய அமெரிக்கா வலியுறுத்தல்
Recommended Video
நியூயார்க்: ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தி, தடுப்பு காவலில் உள்ள அனைவரையும் விடுதலை செய்ய இந்தியா விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் 74-வது கூட்டத்தில் அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை செயலாளர் ஆலிஸ் வெல்ஸ் பேசியதாவது:

ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஏராளமானோர் தடுத்து வைக்கப்பட்டிருப்பது கவலை தருகிறது. அம்மாநிலத்தில் அரசியல் நடவடிக்கைகளை இந்திய அரசு தொடங்க வேண்டும். ஏற்கனவே உறுதி அளித்தபடி விரைவாக தேர்தல்களை நடத்த வேண்டும்.
ஜம்மு காஷ்மீரில் கட்டுப்பாடுகளை தளர்த்தி தடுப்புக் காவலில் உள்ளோரை விடுவிக்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை இந்திய அரசு வேகமாக மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு ஆலிஸ் வெல்ஸ் வலியுறுத்தினார்.
முன்னதாக ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாக ஒரு தகவல் வெளியானது. இதற்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அமெரிக்கா தமது கருத்தை திரும்பப் பெற்றது.
இதனைத் தொடர்ந்து ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். முதலில் ஹூஸ்டன் நகரில் ஹவுடி மோடி நிகழ்ச்சியில் மோடியும் டொனால்டு டிரம்ப்பும் பங்கேற்றனர்.
பின்னர் இருவரும் பல்வேறு நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்றனர். அப்போது, இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி என புகழாரம் சூட்டியிருந்தார் டிரம்ப். இந்நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு தற்போது அமெரிக்கா அழுத்தம் கொடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications