அமெரிக்காவை அசத்திய அருணா.. மேரிலேண்டில் கால் பதித்த முதல் இந்திய பெண்.. கவர்னர் தேர்தலில் கலக்கல்
நியூயார்க்: அமெரிக்காவில் நடைபெற்ற மிட் டேர்ம் தேர்தலில் மேரிலேண்ட் துணை கவர்னர் பதவியில் இந்தியரான அருணா மில்லர் அமர்ந்துள்ளார். இவர் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் உள்ள இரண்டு அவைகளுக்கான மிட் டேர்ம் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. அதேபோல் கவர்னர் 36 பதவிகளுக்கு தேர்தல் நடந்து உள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன.
அதில் 18 கவர்னர் பதவிகளுக்கான முடிவுகள் வந்துள்ளன. அதில் 13ல் டிரம்பின் குடியரசு கட்சி வென்றுள்ளது. 5 மேயர் இடங்களில் பிடனின் ஜனநாயக கட்சி வென்றுள்ளது. . தேர்தல் நடக்காத பழைய இடங்களையும் சேர்த்து டிரம்பின் குடியரசு கட்சிக்கு 22 கவர்னர் , ஜனநாயக கட்சிக்கு 12 பேர் உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையோடு சேர்த்து கவர்னர் தேர்தலும் நடைபெற்று உள்ளது. கவர்னர் என்பவர் மாகாணத்தின் தலைவர் ஆவார். பொதுவாக இது போன்ற தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் துணை கவர்னரை தேர்வு செய்வதில் கவனமாக இருப்பார்கள். மக்கள் வாக்குகளை கவரும் வகையில் துணை வேட்பாளர்களை தேர்வு செய்வார்கள். உதாரணமாக.. அதிபர் தேர்தலில் பிடன் நின்ற போது துணை அதிபராக கமலா ஹாரிஸை வேட்பாளராக அறிவித்தார்.

பிடன்
பிடனுக்கு வெள்ளையர்கள் ஆதரவு இருக்கும் என்பதால், ஆப்ரோ அமெரிக்கன்ஸ் - இந்தியன்ஸ் ஆதரவை பெற வேண்டும் என்று அவர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்தார். இது அவருக்கு பெரிய அளவில் உதவியது. ஆனால் டிரம்பிற்கு அப்போது இப்படி துணை அதிபர் வேட்பாளராக ஆப்ரோ அமெரிக்கன்ஸ் பிரிவினரை தேர்வு செய்யும் விருப்பம் இல்லை. இது தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது.

மேரிலேண்ட்
அந்த வகையில்தான் தற்போது மேரிலேண்ட் மாகாணத்தில் நடைபெற்ற கவர்னர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லர் கவனம் பெற்றுள்ளார். இவர் பூர்வீகம் ஆந்திர பிரதேசம் ஆகும். ஆனால் சிறு வயதிலேயே இவர் குடும்பத்தோடு அமெரிக்காவில் குடியேறிவிட்டார். இந்த நிலையில் மேரிலேண்ட் மாகாணத்தில் இந்த முறை வெஸ் மூர் ஜனநாயக கட்சி சார்பாக கவர்னர் தேர்தலில் போட்டியிட்டார்.

வெஸ் மூர்
தனது துணை கவர்னர் வேட்பாளராக வெஸ் மூர் இந்திய வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லரை தேர்வு செய்தார். இந்த நிலையில் இரண்டு பேருமே அங்கு கவர்னர் - துணை கவர்னர் தேர்தலில் வென்றுள்ளனர். மேரிலேண்ட் கவர்னராக முதல்முறை ஆப்ரோ அமெரிக்க பிரிவை சேர்ந்த வெஸ் மூர் வென்றுள்ளார். அதேபோல் துணை கவர்னராக இந்தியரும், ஆசியாவை சேர்ந்தவருமான அருணா மில்லர் முதல்முறை துணை கவர்னராக வென்றுள்ளார்.

அருணா மில்லர்
வெஸ் மூர் கவர்னராக வெற்றிபெற அருணா மில்லர் மிக முக்கியமான காரணம் என அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அங்கு இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் இந்தியர்களின் வாக்குகள் வெஸ் மூருக்கு கிடைக்க அருணா மில்லர் முக்கியமான காரணமாக அரசியல் வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர். எதிர்காலத்தில் அருணா மில்லர் இதன் மூலம் மேரிலேன்ட் கவர்னர் ஆகும் வாய்ப்புகளும் உள்ளன. 2018ல் பிரதிநிதிகள் சபை தேர்தலில் இவர் தோல்வி அடைந்த நிலையில் தற்போது துணை கவர்னர் தேர்தலில் வென்றுள்ளார்.














Click it and Unblock the Notifications