என்ஐஏவுக்கு தண்ணீ காட்டிய பயங்கரவாதி.. அமெரிக்காவில் தூக்கிய அதிகாரிகள்.. யார் இந்த பசியா? பின்னணி
நியூயார்க்: இந்தியாவில் பல்வேறு தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்தவரும், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு கொண்டவருமான ஹர்பிரீத் சிங் என்ற ஹேப்பி பசியா என்பவரை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் தான் அவர் அமெரிக்காவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு விட்டு வெளிநாடுகளுக்கு பலர் தப்பித்து செல்கின்றனர். இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டே இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கைது செய்து இந்தியா கொண்டு வருவதில் பல சவால்கள் உள்ளன.

இருப்பினும் மத்திய அரசு வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவில் குற்றம் புரிபவர்களை தட்டித்தூக்கி வருகிறது. அந்த வகையில் இந்தியாவுக்கு தொடர்ந்து குடைச்சல் தந்த நபர் அமெரிக்காவில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது பெயர் ஹர்பிரீத் சிங் என்ற ஹேப்பி பசியா. இவர் பஞ்சாப்பை சேர்ந்தவர். அமெரிக்காவில் பதுங்கி இருந்து வந்தார். இவர் பஞ்சாப்பில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக காலிஸ்தான் பிரிவினைவாதிகளுடன் சேர்ந்து அவர் செயல்பட்டு வந்து குண்டுவெடிப்பு, தாக்குதல்கள் போன்ற சம்பவங்களை அரங்கேற்றி வந்தார். கடைசியாக அவர் கடந்த ஜனவரி மாதம் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவரின் வாகனத்தில் குண்டு வைத்து தகர்த்தார்.
ஹர்பிரீத் சிங் என்ற ஹேப்பி பசியாவுக்கு எதிராக மொத்தம் 14 வழக்குகள் உள்ளன. இவரை பஞ்சாப் போலீசார் மற்றும் என்ஐஏ எனும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பு அதிகாரிகள் தீவிரமாக தேடிவந்தனர். ஆனால் அமெரிக்காவில் பதுங்கியதால் அவர் சிக்கவில்லை. அவரை பற்றி தகவல் அளிப்போருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அவரை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது என்ஐஏ அதிகாரிகளுக்கு பெரும் தலைவலியாக மாறியது.
இந்நிலையில் தான் அமெரிக்காவில் பதுங்கிய ஹர்பிரீத் சிங் என்ற ஹேப்பி பசியா அதிரடியாக கைது செய்துள்ளனர். அவரை அமெரிக்காவின் ஃஎப்பிஐ எனும் பெடரல் பியூரோ ஆப் இன்வெஸ்டிகேஷன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தற்போது அவரிடம் அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். தற்போது அமெரிக்க அதிகாரிகளிடம் சிக்கிய ஹர்பிரீத் சிங் என்ற ஹேப்பி பசியாவை நாடு கடத்த தேவையான நடவடிக்கையை என்ஐஏ அதிகாரிகள் மேற்கொள்ள உள்ளனர்.












Click it and Unblock the Notifications