டேட்டிங் ஆப்.. 31 வயதில் பில்லியனர் - ஆண்கள் பொறாமை கொள்ளும் விட்னே ஹெர்ட்
நியூயார்க்: bumble எனும் டேட்டிங் ஆப்-ன் நிறுவனரான விட்னே ஹெர்ட், 31 வயதில் 1.5 பில்லியன் டாலர் சொத்துக்கு அதிபதியாகியுள்ளார்.
டிண்டர் ஆப் கேள்விப்பட்டு இருக்கீங்களா? அதாங்க இந்த டேட்டிங் ஆப். நேரில் சந்திக்காமல், ஆப் வாயிலாக பேசி, பிடித்திருந்தால் நேரில் சந்திக்கும் அற்புதமான பாலமாக பலமாக இருந்து வரும் ஆப் இது. இளசுகள் முதல் பெருசுகள் வரை, பலரும் இந்த ஆப் மூலம் தங்கள் ஊரில் ஒரு துணையை.. அதாவது டேட்டிங் துணையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
திருட்டுத்தனமாக மொபைலில் ரேண்டமாக பெண்களுக்கு கால் செய்து சிக்குவது போன்ற சட்டரீதியான சிக்கல்களை தவிர்க்க இந்த ஆப் உதவியது. ஏனெனில், இங்கு வருபவர்களே டேட்டிங் எண்ணத்தில் தான் இருப்பார்கள் என்பதால், எந்த சிக்கலும் இங்கு கிடையாது.
உதயமான பம்பிள்
இந்த டின்டர் நிறுவனர்களில் ஒருவர் Whitney Wolfe Herd. அங்கே பார்ட்னர்கள் இடையே பிரச்சனை ஏற்பட, அங்கிருந்து வெளியான விட்னே, போட்டி டேட்டிங் ஆப் ஒன்றை தொடங்கினார். அதன்பெயர் 'bumble'. இப்போது இந்த பம்பிள் ஆப் தான் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.
11 ஆயிரம் கோடி
சமீபத்தில் பங்குச் சந்தைக்குள் நுழைந்த bumble ஆப்-ன் ஷேர் மதிப்பு எதிர்பார்த்ததைவிட அதிகரித்தது. அதனால் bumble-ன் மதிப்பு 14 பில்லியன் டாலராக உயர்ந்தது. அந்த மதிப்பின்படி பார்த்தால் விட்னியின் சொத்து மதிப்பு இப்போது 1.5 பில்லியன் டாலர்கள். இந்திய மதிப்பில் 11,000 கோடி.
பெண்களுக்கே முன்னுரிமை
ஜஸ்ட் 31 வயதாகும் விட்னே, உலக அளவில் இவ்வளவு பெரிய நிறுவனத்தைத் தலைமையேற்று நடத்தும் வயது குறைந்த பெண் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். தவிர, bumble ஆப் டேட்டிங் ஆப்தான் என்றாலும், இதில் பெண்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது. அவர்களுக்கு என்ன தேவையோ, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதே இந்த ஆப்-ன் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள்.
பில்லியனர்
கோவிட் நெருக்கடி காலத்தில், எல்லோரும் முதலில் விர்ச்சுவலாகச் சந்தித்து பேசிவிட்டு, பின்னரே நேரில் சந்திக்க விரும்புகிறார்கள். அதுவும் bumble-ன் உச்சத்துக்குக் காரணம் என்கிறார்கள். 31 வயதில் இத்தனை கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதியாகியிருக்கும் விட்னே தொடர்ந்து உச்சம் தொட வாழ்த்துகள்.