தம்பி சாப்பாடு இல்லையா.. ஊட்டியில் வீட்டில் விருந்தாளியாக வந்த சிறுத்தை.. மிரள வைத்த சம்பவம்
ஊட்டி: நீலகிரி மாவட்டம் ஊட்டியைச் சுற்றியுள்ள பெரும்பாலான கிராம பகுதிகள் அடர்ந்த வனப்பகுதியையும், தேயிலை தோட்டங்களையும் ஒட்டியிருக்கிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராம பகுதிகளில் வன விலங்குகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. புலி, காட்டெருமை, யானைகள் அதிகமாக உள்ளன. அடிக்கடி காட்டு யானைகளும், அவ்வப்போது புலிகளும் உலா வருகின்றன. அந்த வகையில் ஊட்டி அருகே அணிக்கொரை பகுதியில் இரவு நேரத்தில் வீட்டுக்குள் சிறுத்தை புகுந்திருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்டம் முற்றிலும் மலைகள் உள்ள மாவட்டமாக இருக்கிறது. இங்குள்ள ஊட்டி தான் மிகப்பெரிய நகரமாகவும், தலைநகரமாகவும், மிகப்பெரிய சுற்றுலா தலமாகவும் இருக்கிறது. நீலகிரியில் பெரும்பாலும் வனப்பகுதிகளே உள்ளன.

அதேநேரம் வனப்பகுதிக்கு இடையே ஆங்காங்கே தேயிலை தோட்டங்களும், குடியிருப்புகளும் உள்ளன. இந்த குடியிருப்புகள் 100க்கணக்கான ஆண்டுகளாக உள்ளன. கிராமங்களிலும் சரி, நகரங்களிலும் சரி, வனப்பகுதி நிலங்களும், தேயிலை தோட்டங்களும் அதிகமாக உள்ளன. கிராமங்களுமே அடர்ந்த வனப்பகுதிகளுக்கு இடையில் தான் உள்ளது. எனவே ஊட்டி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இவை அடிக்கடி ஊருக்கு வருவது வழக்கமாக உள்ளன. காட்டு யானைகளும், சிறுத்தை மற்றும் புலி ஆகியவை அடிக்கடி வந்து சேதத்தை ஏற்படுத்துகின்றன.
அந்த வகையில் ஊட்டி அருகே உள்ள அணிக்கொரை கிராம குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்த சிறுத்தை அங்குள்ள வீட்டிற்குள் நுழைந்தது. நீண்ட நேரமாக உலா வந்த சிறுத்தை சாப்பிட எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து வெளியில் ஓடிச் சென்று மறைந்துவிட்டது. சிறுத்தை வீட்டிற்குள் புகுந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
சிறுத்தை நடமாட்டத்தால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பீதி அடைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிக்குள் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. தற்போது வீட்டிற்குள்ளும் புகுந்திருக்கிறது. இதனால் இரவு நேரங்களில் வெளியே செல்லவே அச்சமாக இருப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டு வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கொல்லிமலை பகுதியில், 2 சிறுத்தைகள் சுற்றித்திரிந்தது. அண்மையில் காவல் நிலையம் பகுதியிலேயே சிறுத்தை ஒன்று உலா வந்தது. இதேபோல் அடிக்கடி காட்டு யானைகளும் உலா வருவது தொடர்கிறது.












Click it and Unblock the Notifications