20 லட்சம் வாங்கிட்டு வா.. வரதட்சணைக்காக காபியில் விஷம்.. இளம்பெண் கொலை! கணவன் வீட்டினர் கொடூரம்
ஊட்டி: ஊட்டி அருகே ரூ.20 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுக்காததால், மருமகளை காஃபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த கணவர், கணவரின் சகோதரர் மற்றும் அவரது தாய் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஊட்டி பென்னட் பகுதியை சேர்ந்தவர் ஜவஹருல்லா. இவரது மனைவி யாஸ்பின். இந்த தம்பதிக்கு இம்ரான் (வயது 27), முக்தா (24) என 2 மகன்கள் உள்ளனர். இதில் இம்ரானுக்கு திருமணம் ஆகிவிட்டது. கடந்த 2021 ஆம் ஆண்டு இம்ரான் ஊட்டி வண்டிச்சாலை பகுதியை சேர்ந்த ஆஷிகா பர்வீன் (22) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 வயதில் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் ஆஷிகா பர்வீன் கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி வாயில் நுரை தள்ளிய நிலையில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதையடுத்து அவரது உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் ஆஷிகா பர்வீன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசில் தெரிவித்தனர். மேலும் இம்ரானின் குடும்பத்தினர் தான் எனது மகளை கொலை செய்திருக்க கூடும் என்றும் போலீசாரிடம் கூறினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து புனேவிற்கு அவரது உடல் அனுப்பப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆஷிகா பர்வீன் சயனைடு கலந்த காஃபி குடித்ததால் தான் உயிரிழந்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினரை பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், ஆஷிகா பர்வீனின் கணவர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தான் கூடுதல் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், இதில் ஏற்பட்ட பிரச்சினையில் தான் அவர்கள் விஷம் கலந்த காஃபியை கொடுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
இம்ரான் குடும்பத்தினர் புதிதாக இடம் ஒன்று வாங்க முடிவு செய்துள்ளனர். ஆனால் அதற்கு பணம் குறைவாக இருந்ததால், இம்ரானின் மனைவி ஆஷிகா பர்வீனிடம் கேட்டுள்ளனர். ரூ.20 லட்சம் வாங்கிக்கொண்டு வா என்று கூறியுள்ளனர். ஆனால் ஆஷிகா பர்வீன் பெற்றோரால் அவ்வளவு பணத்தை புரட்ட முடியாமல் போனது. இதனால் இது தொடர்பாக இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் இம்ரான் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆஷிகாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். நகைக்கடையில் நகைகளுக்கு பாலீஷ் போடப்படும் சயனைடு கலந்த விஷத்தை காஃபியில் கலந்து ஆஷிகா பர்வீனுக்கு கொடுத்துள்ளனர். இதை குடித்து தான் அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து போலீசார் இம்ரான் மற்றும் யாஸ்பின், முக்தார் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாகவும், இது குறித்து தீவிர விசாரணை நடப்பதாகவும் போலீசார் கூறினர்.












Click it and Unblock the Notifications