கொடைக்கானலில் இதமான சாரல் மழை... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
Recommended Video

கொடைக்கானல்: கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் மூடுபனியுடன், மழை பெய்து வருகிறது. மூலிகை வாசத்துடன் சாரல் மழை பெய்வதால், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
மழையில் நனைந்தப்படி சுற்றுலா இடங்களை, பார்வையிட்டு மகிழ்ந்து வருகின்றனர் சுற்றுலா பயணிகள். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கொடைக்கானல், செண்பகனூர், பிரகாசபுரம், அட்டக்கடி, இருதயபுரம், வில்பட்டி, மாட்டுப்பட்டி, பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால், மலை கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த உருளை கிழங்கு, கேரட், பீன்ஸ், முள்ளங்கி ஆகிய காய்கறி பயிர்களின் விளைச்சலுக்கு ஏற்றதாக தற்போதைய அமைந்துள்ளது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக, வறட்சியின் காரணமாக எலும்பள்ளம் ஏரி, குண்டம்பாச்சி, கூக்கால், கோணலாறு, அருங்காட்டுபள்ளம், தொழுவம்பட்டி ஆகிய ஏரிகள் வறண்ட நிலையில் காணப்பட்டது. தற்போது பெய்த மழையினால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருப்பதால் கொடைக்கானல் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், சில நாட்களுக்கு மழை தொடர வேண்டும் என விவசாயிகள் பிரார்த்தனை நடத்தி வருகின்றனர். கீழ்மலை கிராமங்களான தாண்டிக்குடி, பெரும்பாறை ஆகிய பகுதிகளில் 1 மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. கொடைக்கானலில் தற்போது, நிலவும் சீதோஷண நிலையை சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications