ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் அனுமதிக்கப்படும்? இன்று மாலை வெளியாகிறது ரூல்ஸ்
நீலகிரி: உதகை, கொடைக்கானல் செல்வதற்கான இ - பாஸ் வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மே 7 ஆம் தேதி முதல் ஜூன் 30 ஆம் தேதி வரை இ - பாஸ் நடைமுறை அமலில் இருக்கும்.
கோடை வெயிலில் இருந்து தப்பித்துக்கொள்ள சுற்றுலாப்பயணிகள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களுக்கு விசிட் அடித்து வருகிறார்கள். கோடை விடுமுறையும் விடப்பட்டுள்ளதால், ஊட்டி கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இ பாஸ் கட்டாயம்: இதனால், கடந்த ஒரு மாதங்களாக, சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. மேலும் அதிகரிக்கும் வாகனங்களால் ஊட்டி, கொடைக்கானலில் கடுமையான போக்கு வரத்து நெரிசலும் ஏற்படுகிறது. சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கூட்டமாக படையெடுப்பதால், ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளில் எங்கு பார்த்தாலும் வாகன நெரிசலாகவே காணப்படுகிறது.
இந்த நிலையில்தான், ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், இ-பாஸ்க்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
வழிகாட்டு நெறிமுறைகள்: உள்துறை மற்றும் பொதுத்துறை இணைந்து இ - பாஸ்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கியுள்ளது. இந்த நெறிமுறைகள் அனைத்தும் தயார் செய்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தகவல் தொழில் நுட்ப துறை சார்பாக இ பாஸ் பெறுவதற்கான இணையதளமும் உருவாக்கப்பட்டுவிட்டதாம். எனவே இன்று மாலை வெளியாகும். என சொல்லப்படுகிறது.
ஒரு நாளைக்கு எத்தனை வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்பது போன்ற விதிமுறைகள் இடம் பெற்று இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு எந்த கட்டுப்பாடும் இருக்காது என சொல்லப்படுகிறது. இ பாஸ் பெறாமல் வரும் சுற்றுலாப்பயணிகளின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இ-பாஸ்க்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்: சுற்றுச்சூழல் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்மையில் விசாரணைக்கு வந்தது.. அப்போது, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் காணொலி மூலம் ஆஜராகியிருந்தனர். ஊட்டி, கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் செல்லலாம் என்பது குறித்து சென்னை ஐ.ஐ.டி. மற்றும் பெங்களூரு ஐ.ஐ.எம். கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்ய உள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அரசு தாக்கல் செய்த அறிக்கையில், ஊட்டிக்கு தினமும், ஆயிரத்து 300 வேன்கள் உள்பட 20 ஆயிரம் வாகனங்கள் வருகை தருவதாக தெரிவிக்கப்பட்டது. இத்தனை வாகனங்கள் சென்றால் நிலைமை மோசமாகும் எனவும், உள்ளூர் மக்கள் நடமாட இயலாது எனவும், சுற்றுச்சூழலும், விலங்குகளும் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்ட நீதிபதிகள், ஐ.ஐ.டி மற்றும் ஐ.ஐ.எம். ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் வரை, இடைக்கால நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.
எத்தனை நாள் தங்குவார்கள்: இதையடுத்து, கொரோனா காலத்தில் நடைமுறையில் பின்பற்றப்பட்ட இ - பாஸ் நடைமுறையை ஊட்டி, கொடைக்கானலில் மே 7 ம்தேதி முதல் ஜூன் 30 ம் தேதி வரை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த இ - பாஸ் வழங்கும் முன், வாகனங்களில் வருவோரிடம், என்ன மாதிரியான வாகனம், எத்தனை பேர் வருகின்றனர், ஒரு நாள் சுற்றுலாவா அல்லது தொடர்ந்து தங்குவார்களா என்பன உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சியர்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.இ பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு: இ பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை கொடுக்க வேண்டும் எனவும், இ பாஸ் வழங்குவதற்கு தேவையான தகவல் தொழில்நுட்ப உதவிகளை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், ஊட்டியில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணவும் அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை ஜூலை 5 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். இந்த நிலயில், உயர் நீதிமன்ற உத்தரவுபடி ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ பாஸ் நடைமுறை விதிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications