திடீரென அலறிய யானை.. காதுக்குள் ஆசிட் ஊற்றி.. தீ மூட்டி.. மிரண்டு போன டாக்டர்கள்.. உறைந்து போன ஊட்டி
யானையின் காதில் ஆசிட்டை ஊற்றி கொன்றுள்ளனர் மர்ம நபர்கள்
ஊட்டி: யானையின் காதில் ஆசிட்டை ஊற்றி கொன்றுள்ளனர் குரூரர்கள்.. தீ வைத்தும் சித்ரவதை செய்திருக்கிறார்கள்.. உயிரிழந்த யானையின் போஸ்ட் மார்ட்டத்தை பார்த்து, நீலகிரியே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
Recommended Video
மசினகுடி பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு யானை சுற்றி வந்தது.. அந்த யானைக்கு 40 வயதிருக்கும்.. அதன் முதுகில் காயம் இருந்தது.
இதை பார்த்த வனத்துறையினர் அந்த யானைக்கு கடந்த மாதம் சிகிச்சை தந்தனர்.. அதனால் உடல்நிலையும் தேறி வந்தது.
ரத்தம்
இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு அந்த யானையின் காது கிழிந்து ரத்தம் கொட்ட தொடங்கியது.. வலியும் வேதனையும் தாங்க முடியாமல் யானை அங்குள்ள தண்ணீருக்குள் நின்று அலறியது. இதனையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்த யானையை வனத்துறையினர் முதுமலை வளர்ப்பு யானை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
போஸ்ட் மார்ட்டம்
ஆனால் அதற்குள் வழியிலேயே யானை இறந்துவிட்டது. இதையடுத்து, அந்த யானைக்கு இன்று காலை போஸ்ட் மார்ட்டம் நடைபெற்றது.. அப்போதுதான் டாக்டர்களே மிரண்டு போய்விட்டனர்.. யானையின் காது பகுதியை பெட்ரோல் வைத்து தீ மூட்டி எரித்ததற்கான ஆதாரங்கள் தென்பட்டுள்ளன.. மேலும் மேலும் யானை மீது ஆசிட் ஊற்றியும் காயப்படுத்தியிருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
ஆசிட்
அந்த ஆசிட்டை ஊற்றியதாலும், பெட்ரோல் ஊற்றி எரித்ததாலும்தான், காது பகுதி வெந்து போய், யானை துடிதுடித்து இறந்ததும் தெரியவந்துள்ளது... இந்த காயத்தினால் யானையின் உடலில் இருந்து சுமார் 40 லிட்டர் வரை ரத்தம் வெளியேறியிருக்கிறதாம்... அதேபோல, யானையின் முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த பழைய காயத்தால் யானையின் 2 விலா எலும்புகள் துண்டிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது.. யார் இந்த படுபாதக செயலை செய்தது என்று தெரியவில்லை.
விசாரணை
ஆனால், யானையின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபர் குறித்து வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. .அதனால் அந்த மர்மநபர்கள் விரைவில் கைதாகலாம் என்றும் தெரிகிறது. ஏற்கனவே காயமடைந்த ஒரு யானையை, சித்ரவதை செய்து கொன்ற மிருகங்களை என்னவென்று சொல்வது? நீலகிரியே நடுங்கி போயுள்ளது இந்த காரியத்தினால்