குன்னூரில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை.. மண் சரிவால் கார்கள் சேதம் - போக்குவரத்து பாதிப்பு!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. அதி கனமழையால் குன்னூர் உழவர் சந்தை மாடல் ஹவுஸ் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதில் கார்கள் சேதமடைந்தன. கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 21.5 செ.மீ, கோத்தகிரி 11.4 செ.மீ, குன்னூர் புறநகர் 9 செ.மீ, கீழ் கோத்தகிரி 7.3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்ட நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியின் காரணமாக காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பனியின் தாக்கம் குறைந்து மழை பெய்தது. நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

குன்னூர், கோத்தகிரி, குந்தா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 215 மி.மீ, கோத்தகிரியில் 114 மி.மீ, குன்னூர் புறநகர் 90 மி.மீ என மாவட்டத்தில் 980.6 மி.மீ மழை ஒரே இரவில் பதிவாகியுள்ளது.
கனமழை காரணமாக குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆங்காங்கே சிறு சிறு மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குன்னூர் உழவர் சந்தை அருகே உள்ள மாடல் ஹவுஸ் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். உழவர் சந்தை பகுதியில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள் மண் சரிவில் சிக்கி சேதமடைந்தன.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் மண் சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மலை ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவால் குன்னூர் - ஊட்டி இடையே மலை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சாலையின் குறுக்கே விழுந்துள்ள மரங்களை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மட்டும் 12 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டிருப்பதாக வருவாய்த்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜே.சி.பி இயந்திரங்களின் உதவியுடன் மண் குவியல்களை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications