ஊட்டி தேயிலை தோட்டத்தில் 32 மணி நேரமாக அசையாமல் படுத்திருக்கும் புலி! காலில் என்னாச்சு?
ஊட்டி: நீலகிரி மாவட்டம் உதகையில் போர்த்தி கிராமத்தில் காலில் காயமடைந்த புலி ஒன்று 32 மணி நேரமாக தேயிலை தோட்டத்தில் பதுங்கியிருப்பது கிராமத்தினரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்த போர்த்தி கிராமத்திற்கு அருகே காலில் காயமடைந்த புலி ஒன்று அங்குள்ள தேயிலை தோட்டத்திற்குள் நுழைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புலியை டிரோன் கேமரா உதவியுடன் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த புலி வேறொரு புலியுடன் சண்டையிட்டிருக்கலாம் என்றும் அதனால் அதன் காலில் காயம் ஏற்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
காலில் காயம் ஏற்பட்டதால் அந்த புலி நகர முடியாமல் தேயிலை தோட்டத்திலேயே இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் அந்த தேயிலை தோட்டத்திற்கு அருகே குடியிருப்புகளும் விவசாய நிலங்களும் இருக்கின்றன.
மேலும் தேயிலை தோட்டங்களுக்கு வேலை செல்ல பெண்கள் அச்சம் கொள்கிறார்கள். எனவே அந்த புலியை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டு விட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காலில் காயத்துடன் தேயிலை தோட்டத்தில் படுத்து கிடக்கும் புலி, வந்து வாரக்கணக்கில் ஆகிவிட்டால் அங்கேயே தங்கிவிடும். இதனால் அதன் காயத்தை வனத்துறையினர் சரி செய்து காட்டுக்குள் அந்த புலியை விட்டுவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த புலியை தேயிலை தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச சென்றவர்கள்தான் பார்த்தனர். இதையடுத்துதான் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்த புலியை கூண்டு வைத்து பிடித்துவிட கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுவாக இந்த பகுதியில் சிறுத்தை, கரடி, காட்டுமாடு போன்றவைகள்தான் அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது புலியின் நடமாட்டமும் இருப்பதால் அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். மேலும் புலி கால்நடைகளை வேட்டையாடியதால் பொதுமக்கள் இந்த புலியை பிடிக்க கோருகிறார்கள்.
கிட்டதட்ட 32 மணி நேரமாக அந்த புலி ஒரே இடத்தில் படுத்திருக்கிறது என்பதை டிரோன் மூலம் வனத்துறையினர் கண்டுபிடித்து தொடர்ந்து அதன் நடமாட்டத்தை கண்காணித்தும் வருகிறார்கள்.
அது போல் கோவையில் பி.என்.புதூர் பகுதியில் காட்டுப்பன்றிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இவை பொதுமக்களை தாக்குவதாலும் பயிர்களை சேதம் செய்வதாலும் இந்த காட்டுப்பன்றிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications