ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போதே கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை முயற்சி.. மாஜி ஊராட்சி தலைவர் பகீர்
ஊட்டி: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ர போதும் கொடநாடு எஸ்டேட்டில் ஒரு முறை கொள்ளை சம்பவம் நடந்ததாகவும் ஆனால் அவர்களால் கொள்ளையடிக்க முடியாததால் தப்பி ஓடியதாகவும் கொடநாடு ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த பொன்தோஸ் தெரிவித்தார்.
Recommended Video
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டானது அவர் கோடை காலத்தில் பயன்படுத்தி வந்தார். கிட்டத்தட்ட சிறிய தலைமைச் செயலகமாகவே இது கோடை காலங்களில் செயல்பட்டு வந்தது என்று சொல்லலாம்.
இந்த எஸ்டேட்டில் அவரது மறைவுக்கு பின்னர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ர்ல 24 ஆம் தேதி கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது. அப்போது அதை தடுத்த எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

ஆவணங்கள் காணவில்லை
இதையடுத்து அங்கிருந்த சில முக்கிய ஆவணங்களும் சில பொருட்களும் காணாமல் போயின. கொள்ளையில் தொடர்புடையதாக சொல்லப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் எடப்பாடியில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பின்னர் சயானும் குடும்பத்துடன் காரில் செல்லும் போது விபத்துக்குள்ளாகி, மனைவி மற்றும் அவரது குழந்தை உயிரிழந்தனர். விபத்தில் படுகாயமடைந்த சயான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

கம்ப்யூட்டர் ஆபரேட்டர்
கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆபரேட்டரும் 2017ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரம் குறித்து 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் எந்தவித நகர்வும் இல்லாத நிலையில் தற்போது வழக்கானது மறு விசாரணைக்கு செல்லும் அளவுக்கு சூடு பிடித்துள்ளது.

ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர்
நேற்றைய தினம் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் கொள்ளை போன பொருட்கள், கோப்புகள் குறித்து காவல் துறையினர் கேட்டறிந்தனர். ஆனால் அவரோ முன்னுக்கு பின் முரணாக பதிலை தெரிவித்தார். அது போல் இறந்த கனகராஜின் மனைவி கலைவாணி மற்றும் மைத்துனர் தினேஷிடமும் கோவையில் ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அப்பல்லோ மருத்துவமனை
இதே போன்று ஒரு கொள்ளை சம்பவம் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதே ஒரு நாள் இரவு நடைபெற்றதாக கொடநாடு ஊராட்சியின் தலைவராக இருந்த பொன்தோஸ் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் "ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த போது ஒரு முறை கொள்ளை சம்பவம் நடந்தது.

காவலாளிகள்
ஆனால் கொடநாடு எஸ்டேட்டில் தேயிலை தொழிற்சாலை இரவு இயங்கி கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த பணியாளர்கள் எஸ்டேட் பகுதிக்குச் சென்ற போது கொள்ளையர்களை பார்த்து விரட்டி அடித்துவிட்டனர். இந்த விஷயத்தை சோலூர்மட்டம் காவல் துறையில் புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்கிறார். மேலும் எஸ்டேட்டில் காலை 15 பேர், இரவு நேரத்தில் 15 பேர் என காவலாளிகள் உள்ள நிலையில் 2017 இல் கொள்ளை சம்பவம் நடந்த போது இரவு நேரத்தில் வெறும் இரண்டு காவலாளிகள் மட்டுமே இருந்தது ஏன் என்று சந்தேகத்தை போலீஸாருக்கு ஏற்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications