கோடநாடு கொலை, கொள்ளை..300 பேரிடம் விசாரணை..அவகாசம் கேட்ட போலீஸ் - செப். 23க்கு வழக்கு ஒத்திவைப்பு
நீலகிரி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் தகவல் தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் மேலும் பலரிடம் விசாரணை நடைபெற இருப்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும் எனவும் காவல்துறையினர் அவகாசம் கேட்டதை அடுத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செப்டம்பர் 23ஆம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொள்ளை முயற்சி நடந்தது. இதில், அந்த எஸ்டேடின் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரணை நடத்தி 10 பேரை கைது செய்தனர்.
இதற்கிடையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறையினர் சென்னை சிஐடி நகரில் உள்ள, கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் செந்தில்குமாரின் வீட்டில் சோதனை நடத்திய போது சில ஆவணங்களை கைப்பற்றினர். கோடநாடு எஸ்டேட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களுக்கும், கைப்பற்றப்பட்ட ஆவணங்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கில் தொடர்புடைய சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
திமுகவில் ஆறுகுட்டி.. 'வாக்குமூலத்தால் அதிமுக 'தலை’களுக்கு சிக்கல்’ - கோடநாடு வழக்கில் திருப்பம்?!
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை மீண்டும் தீவிரமடைந்தது. கோவை மேற்கு மண்டல ஐஜி ஆர்.சுதாகரின் நேரடி மேற்பார்வையில், நீலகிரி மாவட்ட போலீஸார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
5 தனிப்படைகள் அமைப்பு
இந்த வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் வருமான வரித்துறையினர் மூலம் அந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். அதனடிப்படையில் தொழிலதிபர் செந்தில்குமார், அவரது தந்தை தொழிலதிபர் ஆறுமுகசாமி, கோவையைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி, புதுச்சேரி சொகுசு விடுதி உரிமையாளர் நவீன்பாலாஜி உள்ளிட்ட சிலரிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தினர். தனிப்படை போலீசார் இதுவரை 300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புலன் விசாரணை
இவ்வழக்கின் மறு புலன்விசாரணை தற்போது உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கு விசாரணை இன்று நீதிபதி முருகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு கடந்த ஜூலை மாதம் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, சயான், வாளையார் மனோஜ், ஜித்தின்ஜாய், சம்சீர் அலி ஆகியோர் நேரில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
வழக்கு தள்ளி வைப்பு
இன்றைய தினம் வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது முக்கிய குற்றவாளியாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ், உதயகுமார், ஜித்தின் ஜாய் ஆகிய நான்கு பேர் மட்டும் ஆஜராகினர். வழக்கு தொடர்பாக கூடுதல் காட்சிகள் இடையே விசாரணை நடத்த அரசு தரப்பு சார்பில் நீதிபதியிடம் கால அகவசம் கேட்கப்பட்டதால் வழக்கினை செப்டம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அவகாசம் கேட்ட போலீஸ்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அரசு தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், தற்போது வரை கேரளா, கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை போலீசார் இவ்வழக்கு சம்பந்தமாக 303 நபர்களிடம் விசாரணை நடத்தி உள்ளதாகவும், தகவல் தொழில்நுட்ப கருவிகளின் உதவியுடன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் மேலும் பலரிடம் விசாரணை நடைபெற இருப்பதால் கூடுதல் அவகாசம் வேண்டும் என கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி முருகன் வழக்கு விசாரணையை செப்டம்பர் 23 ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.