எல்.முருகன் Vs ஆ.ராசா! குளுகுளு ஊட்டியில் தகிக்கும் அரசியல் அனல்! லோக்சபா தேர்தல் பணிகள் விறுவிறு!
நீலகிரி: நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில் அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் கூட முழுமையாக இல்லாத்தால் நீலகிரி தொகுதியில் தேர்தல் பணிகளை சத்தமின்றி ஆரம்பித்துவிட்டார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை களம் இறக்கும் திட்டத்தில் இருக்கிறது பாஜக தேசியத் தலைமை. இதன் காரணமாக தான் எல்.முருகன் நீலகிரிக்கு அடிக்கடி விசிட் அடிக்கத் தொடங்கியிருக்கிறார். அதுமட்டுமல்ல அண்மையில் குன்னூர் அருகே நிகழ்ந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்த தகவலை பிரதமர் அலுவலகத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றவரும் இவர் தான்..
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிப்பட்ட கோவை மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அண்ணாமலை பாதயாத்திரை நடத்திய போது அதில் எல்.முருகனும் ஆர்வமுடன் கலந்துகொண்டார். எப்போதும் இல்லாத வகையில் கடந்த 6 மாதங்களாக நீலகிரியில் அடிக்கடி முகாமிடும் முருகன், மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் மீது தீர்வு காண நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
இதை வைத்து பார்க்கும் போது வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆ.ராசாவை எதிர்த்து எல்.முருகன் போட்டியிடுவது உறுதியாகி விட்டதை உணர்த்துகிறது. கடந்த 5 ஆண்டுகளில் நாடாளுமன்றத்தில் பல்வேறு வழிகளில் மத்திய அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் குடைச்சல் கொடுத்தவர் ஆ.ராசா. அதேபோல் பொதுக்கூட்டங்களிலும் பாஜகவை இவரை போல் யாரும் வறுத்தெடுக்க முடியாது. இதனால் ஆ.ராசாவை நாடாளுமன்றத் தேர்தலில் வீழ்த்த கங்கணம் கட்டிக்கொண்டு காரியம் ஆற்றி வருகிறது பாஜக.
இதனிடையே எல்.முருகனை நேருக்கு நேர் தேர்தலில் மோதி பார்த்துவிடலாம் என்ற சவாலுடன் வலம் வருகிறார் ஆ.ராசா. நீலகிரி மக்களவைத் தொகுதி முழுவதும் இப்போது தொடர்ந்து விசிட் அடித்து வரும் அவர் திமுகவில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை சரி செய்து அவர்களை மீண்டும் தேர்தல் பணிகளில் உற்சாகமாக ஈடுபட வைப்பதற்கான வேலைகளை கவனித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications