உயிருக்கு போராடிய குட்டி யானை.. யாரையும் நெருங்கவிடாமல் காப்பாற்ற தாய் யானை நடத்திய பாசப்போராட்டம்
நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகம் அருகே உள்ள தமிழ்நாடு கர்நாடக எல்லையில் உயிருக்குப் போராடிய குட்டி யானையைக் காப்பாற்றத் தாய் யானை நடத்திய பாச போராட்டம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்தது.
யானைகள் எப்போதும் தங்கள் குட்டிகள் மீது அதீத அக்கறை கொண்ட விலங்காகும். தனது குட்டியைத் தாய் யானை எப்போதும் கண்ணும் கத்தமாகப் பார்த்துக் கொள்ளும். உயிருக்கே ஆபத்து ஏற்பட்டாலும் எப்படியாவது குட்டியைக் காப்பாற்றவே முயலும். அப்படியொரு சம்பவம் தான் நீலகிரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் பந்திப்பூர் சரணாலயம் இருக்கிறது. இதன் வழியாகத் தான் கூடலூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
காயம்: இந்த பந்திப்பூர் சரணாலயம் பகுதியில் குட்டி யானை ஒன்றைப் புலி வேட்டையாடியதில் காயமடைந்துள்ளது. சாலையின் அருகிலேயே அந்த குட்டி யானை உயிருக்குப் போராடிக் கொண்டு இருந்த நிலையில், அதன் அருகிலேயே தாய் யானை பாச போராட்டம் நடத்தியது. எப்படியாவது தனது குட்டியைக் காப்பாற்றிவிட முடியாத என்ற ஏக்கத்தில் அந்த தாய் யானை குட்டியின் அருகிலேயே நின்று கொண்டு இருந்தது.
பாசப்போராட்டம்: மேலும், அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் குட்டிக்கு அருகே நெருங்காமல் இருக்கும் வகையில் அங்கு வந்த வாகனங்களையும் துரத்தி அடித்தது. குறிப்பாக அவ்வழியே வந்த ஒரு பேருந்தை அப்படியே அந்த குட்டி யானை தூரத்து அடித்தது. இது தொடர்பான வீடியோ கூட இணையத்தில் டிரெண்டானது.
படுகாயமடைந்து உயிருக்குப் போராடிய தனது குட்டியைக் காப்பாற்ற அந்த தாய் யானை நடத்திய பாசப் போராட்டம் அங்கிருந்த பொதுமக்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது. இந்தச் சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் வனத்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இது தொடர்பான தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர் படுகாயமடைந்த குட்டிக்குச் சிகிச்சை தர முயன்றனர்.
பரிதாபமாகப் பலி: இருப்பினும், தாய் யானை அருகிலேயே நின்று கொண்டு வனத்துறையினரை அருகே அனுமதிக்கவில்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் தாய் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட்டுக் குட்டி யானைக்குச் சிகிச்சை தர முயன்றனர். இருப்பினும் குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதையடுத்து உடலை அவர்கள் அருகிலேயே வனத்தில் புதைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு: இருப்பினும், தாய் யானை அந்த பகுதியிலேயே சுற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வனத்துறையினர் தாய் யானையின் நடமாட்டத்தைக் கவனித்து வருகிறார்கள். படுகாயம் அடைந்த குட்டியைப் பிரியாமல் தாய் யானை நடத்திய இந்த பாச போராட்டம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தில் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications