குன்னூரில் களை கட்டிய பழக்கண்காட்சி.. ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பு
குன்னூர்: குன்னூரில் நேற்று துவக்கி வைக்கப்பட்ட பழக்கண்காட்சியை பார்க்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குவிந்துள்ளனர்.
நீலகிரியில் கோடை விழாவின் தொடர்ச்சியாக 2-வது நாளாக இன்றும் நடைபெற்று வரும் கண்காட்சியை பார்த்து ரசிக்க, ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளதால் குன்னூர் நகரமே சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகிறது.

நீலகிரி மாவட்டத்தில் வருடந்தோறும் வழக்கமாக மே மாதம் கோடை விழா நடைபெறும். இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் காரணமாக கோடைவிழாவில் காய்கறி கண்காட்சி, வாசனை திரவிய கண்காட்சி, ரோஜா கண்காட்சி, படகு போட்டிகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன.
ஊட்டியில் மலர் கண்காட்சி மற்றும் குன்னூரில் பழக்கண்காட்சி இவை இரண்டுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஊட்டி தாவரவியல் பூங்காவில் கடந்த 17-ம் தேதி துவங்கி, தொடர்ந்து 5 நாட்களுக்கு மலர் கண்காட்சி களை கட்டியது. ஆளுநர் பன்வாரிலால் துவக்கி வைத்த இந்த மலர் கண்காட்சியை லட்சத்திற்கும் அதிகமானோர் கண்டு களித்தனர்.
இந்நிலையில் தற்போது குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 61-வது பழக்கண்காட்சி நேற்று துவங்கியுள்ளது. 2 நாட்கள் மட்டுமே இந்த கண்காட்சி நடைபெறும் என்பதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதனை காண நேற்றே முண்டியடித்து சென்றர்.
இக்கண்காட்சியில் 150 டன் பழங்களை கொண்டு வண்ணத்துப்பூச்சி, மயில், மாட்டு வண்டி மற்றும் விவசாய தம்பதி உருவம், ரங்கோலி போன்றவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்துள்ளது. இவற்றின் முன்பு நின்று செல்ஃபி எடுத்து மகிழ்கின்றனர்.
மேலும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுடனும் இவற்றின் முன்பு நின்று உற்சாகமாக போட்டோ எடுத்து கொள்கின்றனர். வழக்கமாக கண்காட்சியில் வைக்கப்படும் பழங்களை குண்டூசி, இரும்பு கம்பி பயன்படுத்தி இணைத்து மாதிரி வடிவங்களை உருவாக்குவர். ஆனால் இதன் காரணமாக பழங்கள் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
இதனை அடுத்து இந்த ஆண்டு பழக்கண்காட்சியில் பழங்கள் சேதமடையாமல் வடிவமைத்துள்ளனர். கண்காட்சி நிறைவடைந்ததும் அங்கிருக்கும் பழங்களை கொண்டு ஜாம்,ஜெல்லி போன்ற பதார்த்தங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications