அமைச்சர் ராமச்சந்திரனுக்கு வந்த சோதனை! அரசு விழாவில் அரை மணி நேரம் பவர் கட்! சொதப்பிய அதிகாரிகள்!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பங்கேற்ற அரசு விழாவில் அரை மணி நேரம் பவர் கட் ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மின்சாரம் வந்துவிடும் என அரைமணி நேரம் பொறுமைக் காத்து பார்த்த அமைச்சர் ராமச்சந்திரன், ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அங்கிருந்து விறுவிறுவென நடையை கட்டினார்.

இதனிடையே மின்வாரிய அதிகாரிக்கு போன் போட்டு கொடுங்க என அமைச்சர் ராமச்சந்திரன் கூறிய நிலையில், அங்கிருந்த அரசு அலுவலர்கள் ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரிக்கு போன் போட்டு கொடுத்து அமைச்சரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டனர்.
நீலகிரி மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் போது மின் தடை ஏற்படுவது இது புதிதல்ல. ஏற்கனவே அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சிகளின் போதும் இதே போல் மின் தடை ஏற்பட்டிருக்கிறது.
அப்போது மின் வாரிய அதிகாரிகளுக்கு போன் போட்டு கொடுக்கச் சொன்ன அமைச்சர் துரைமுருகன், என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க, 3 அமைச்சர்கள் இருக்கிறோம், ஏன் பவர்கட் பண்றீங்கன்னு எல்லோர் முன்னிலையிலும் எகிறினார்.
இதனிடையே கோடை விழாவின் ஒரு பகுதியாக வாசனை பொருட்கள் கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகள், சுற்றுலாத்துறை அமைச்சரிடம் நல்ல பெயர் வாங்கிவிடலாம் என கனவு கண்ட நிலையில் மின் தடை அவர்கள் கனவில் மண்ணை அள்ளி போட்டுவிட்டது.

இது போன்று நிகழ்ச்சி நடக்கிறது, அமைச்சர் பங்கேற்கிறார் என்பதை முன்கூட்டியே மின்வாரிய உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு ஏன் தெரிவிக்கவில்லை எனக் நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனித்த அலுவலர்களை கேட்டுவிட்டு நறுமணப் பொருட்கள் கண்காட்சி தொடக்க விழாவிலிருந்து பாதியிலேயே புறப்பட்டுவிட்டார் ராமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications