நடைபயணம் பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள்? மகிளா காங்கிரஸ் நிர்வாகியிடம் விசாரித்த ராகுல் காந்தி!
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று நடைபயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, தனது பாரத் ஜோடோ யாத்ரா பற்றி தமிழக மக்கள் என்ன பேசுகிறார்கள் என மகிளா காங்கிரஸ் நிர்வாகியிடம் கேட்டறிந்துள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் தலைவராக நீங்கள் தான் வர வேண்டும் என அந்த மகிளா காங்கிரஸ் நிர்வாகி மீண்டும் மீண்டும் கெஞ்ச, அதற்கு பதிலேதும் சொல்லாமல் புன்னகையை மட்டும் பதிலாக கொடுத்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் செல்வப்பெருந்தகையும் கூடலூரில் ராகுலுடன் முழுமையாக நடைபயணம் மேற்கொண்டார்.
கர்நாடகாவில் ராகுல் காந்தி கால் வைத்ததுமே பரபர.. போஸ்டர்கள் கிழிப்பு.. பாஜக அடாவடி என குற்றச்சாட்டு
பாரத் ஜோடோ யாத்ரா
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் இப்போதே தேர்தலை எதிர்கொள்வதற்கான பணிகளை தொடங்கிவிட்டார் ராகுல் காந்தி. கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபயணத்தை தொடங்கிய அவர் கேரள மாநிலத்தை முடித்துவிட்டு இன்று கர்நாடகாவுக்குள் சென்றிருக்கிறார். இதனிடையே கேரளாவிலிருந்து கர்நாடகா செல்லும் வழியில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் நேற்று நடைபயணம் மேற்கொண்டார் ராகுல்.
தமிழக காங்கிரஸ்
தமிழக காங்கிரஸ் சார்பாக அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஹசீனா சையத் ராகுல் காந்தியுடன் 500 மீட்டர் தொலைவுக்கு நடைபயணம் மேற்கொண்ட போது, தமிழகத்தில் பாரத் ஜோடோ யாத்ரா பற்றி மக்கள் என்ன பேசுகிறார்கள், நடைபயணம் குறித்த தகவல் மக்களை முழுமையாக சென்றடைந்துள்ளதா என ராகுல் வினவியிருக்கிறார். அதற்கு பதிலளித்த ஹசீனா சையத், எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய தாக்கம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாக கூறினார்.
காங்கிரஸ் தலைவர்
மேலும், காங்கிரஸ் தலைவராக நீங்கள் தொடர வேண்டும் என்பது எங்களை போன்ற கட்சியினர் விருப்பம் மட்டுமல்ல வெகுஜன மக்களின் எண்ணமும் அதுவாகத் தான் உள்ளது எனக் கூறியிருக்கிறார். இதற்கு எந்த ரியாக்ஷனும் காட்டாமல் சென்ற ராகுலிடம், நீங்களே காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் என கெஞ்சிக் கேட்டிருக்கிறார் மகிளா காங்கிரஸ் தேசிய பொதுச்செயலாளர் ஹசீனா சையத். இதற்கும் பதில் சொல்லாமல் புன்னகை ஒன்றையே பதிலாக கொடுத்துள்ளார் ராகுல்.
புது உற்சாகம்
ராகுலின் இந்த பயணத்தால் கட்சியினருக்கு புது உற்சாகம் கிடைத்திருப்பது உறுதியாகியுள்ளது. பாஜக ஆட்சிக்கு எதிராக கன்னியாகுமரியில் ராகுல் தொடங்கியுள்ள இந்தப் பயணம் அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்தளவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.