“குட்பை” சேட்டன்ஸ்.. “வணக்கம்” தமிழ்நாடு! கேரளா “ஓவர்”.. இன்று நீலகிரியில் ராகுல் காந்தி நடைப்பயணம்
நீலகிரி: கேரளாவில் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வரும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, இன்று கேரள பயணத்தை முடித்துக் கொண்டு மலப்புரம் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு வருகை தருகிறார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ஒற்றுமை யாத்திரையை கடந்த 7 ஆம் தேதி தொடங்கினார் ராகுல் காந்தி.
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் நடக்கத் தொடங்கிய ராகுல் காந்தி 11 ஆம் தேதி கேரள எல்லையில் உள்ள முலகுமூடு கிராமத்திற்கு வந்தடைந்தார். 14 வது நாளான இன்று கேரளாவில் நடை பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

பயண விபரம்
12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல் காந்தி செல்லும் ஒற்றுமை பயணத்தில் அரசியல் பொதுக்குழு கூட்டங்கள் எதையும் நடத்தப்போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 150 நாட்களில் 3,570 கிலோ மீட்டர் தூரம் நடை பயணம் மேற்கொண்டு காஷ்மீரை அடையும் ராகுல் காந்தி செல்லும் வழியெங்கும் மக்களை சந்தித்து வருகிறார்.

கேரளாவில் யாத்திரை
இந்த நிலையில் கேரளாவில் நடைபயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தியுடன் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். கேரளாவின் பல்வேறு மாவட்டங்களை கடந்த ராகுல் காந்தி மலப்புரம் மாவட்டத்திற்கு நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது நடைபயணம் குறித்த செய்திகள் இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கி இருக்கின்றன.

நீலகிரி வருகிறார்
இந்த நிலையில் இன்று தனது கேரள சுற்றுப்பயணத்தை முடித்துக்கொள்ளும் ராகுல் காந்தி, மலப்புரம் மாவட்டம் வழியாக நாடுகாணியில் உள்ள இரு மாநில சோதனைச் சாவடியை கடந்து நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு பிற்பகல் 2 மணியளவில் வருகை தர இருக்கிறார்.

கர்நாடகா பயணம்
கோழிப்பாலம் அரசு கலைக்கல்லூரியில் நடைபயணத்தை தொடங்கும் அவர், தேயிலை தோட்ட தொழிலாளர்கள், விவசாய சங்கத்தினர், பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார். இதனை தொடர்ந்து கூடலூரில் இருக்கும் தனியார் பள்ளி வளாகத்தில் தங்கும் ராகுல் காந்தி முதுமலை வழியாக கர்நாடக மாநிலத்துக்கு சென்றடைகிறார்.












Click it and Unblock the Notifications