நீலகிரி கலெக்டர் இன்னசன்ட் திவ்யாவை மாற்ற கூடாது.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
நீலகிரி கலெக்டரை இடமாற்றம் செய்ய கூடாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
ஊட்டி: யானைகள் வழித்தடத்திலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நீலகிரி கலெக்டர் ஈடுபட்டு வருவதால், அவரை மறு உத்தரவு வரும்வரை இடமாற்றம் செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நீலகிரியில் பெரும்பாலான இடங்கள் வனப்பகுதிகள்தான். குறிப்பாக சீகூர் காடுகள் என்னும் பள்ளத்தாக்கு பகுதி உள்ளது. இங்குதான் நிறைய அளவில் யானைகள் நடமாடும்.
அதேபோல கடநாடு, மசினகுடி, உள்ளத்தி, தெப்பக்காடு போன்ற பகுதிகளும் யானைகள் அதிகளவில் நடமாடும் பகுதிகள்தான்.

மேல்முறையீடு
ஆனால் இந்த பகுதிகளில் நிறைய கட்டிடங்கள் கட்டப்படுவதாகவும், குறிப்பாக யானைகள் நடமாட்டத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் கட்டப்படுவதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு போடப்பட்டது. அதன்படி விதிமுறை மீறி கட்டப்பட்ட காட்டேஜ்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட காட்டேஜ் உரிமையாளர்கள் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சுப்ரீம் கோர்ட் சென்றார்கள்.

ரிசார்ட்டுகள் ஆய்வு
அப்போது, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் யானைகள் நடமாடும் பகுதியில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் விதிமுறை மீறி கட்டப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவுக்கு உத்தரவு பிறப்பித்தனர். அதன்படி, ஆட்சியரும் விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள், ரிசார்ட்டுகளை ஆய்வு செய்த பின்னர் அவற்றிற்கு சீல்வைத்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

ஜனவரிக்கு ஒத்திவைப்பு
இந்நிலையில், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இது தொடர்பான வாதங்களை நீதிபதிகள் கேட்டனர். பிறகு இந்த வழக்கின் விரிவான விசாரணை ஜனவரி மாதத்தில் நடத்தப்படும் என்று கூறி ஒத்தி வைத்தனர்.

மாற்றக்கூடாது
ஆனால் இது சம்பந்தமான பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மேற்கொண்டு வருவதால், மறு உத்தரவு வரும்வரை கலெக்டரை வேறு எங்குமே இடமாற்றம் செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications