மு.க.அழகிரி போல திமுக மேற்கு மண்டல செயலாளராகிறாரா ஆ.ராசா? ஒவ்வொரு தொகுதியிலும் திணற திணற வரவேற்பு!
உதகமண்டலம்: திமுகவில் 2-ம் கட்ட தலைவர்கள் யாருக்கும் இல்லாத பெருவரவேற்பு கொங்கு மண்டலம் எனப்படும் மேற்கு மண்டலத்தின் தொகுதிகளில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கு வழங்கப்பட்டு வருவது புருவங்களை உயர்த்த வைத்துள்ளது.
திமுக பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக தலைவராக மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதேபோல் திமுக துணைப் பொதுச்செயலாளர்களாக ஐ.பெரியசாமி, பொன்முடி, ஆ.ராசா, அந்தியூர் செல்வராசு ஆகியோர் மீண்டும் தேர்வாகினர். புதியதாக திமுக துணைப் பொதுச்செயலராக கனிமொழி தேர்வானார்.

தலைமை கழக நிர்வாகிகளுக்கு வரவேற்பு
திமுக தலைமை கழக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2-ம் கட்ட தலைவர்கள் சொந்த தொகுதிக்கு திரும்பிய போது உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. பெரும்பாலான நிர்வாகிகளுக்கு அவர்களது சொந்த மாவட்டத்தில்தான் இத்தகைய வரவேற்புகள் வழங்கப்பட்டன. ஆனால் துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசாவுக்கான வரவேற்பு கொங்கு மண்டலம் எனப்படும் மேற்கு மண்டலத்தின் பெரும்பாலான சட்டசபை தொகுதிகளில் வழங்கப்பட்டதுதான் பேசுபொருளாகி இருக்கிறது.

ஆ.ராசா எனும் தகத்தகாய சூரியன்
திமுகவில் திராவிடர் இயக்க கொள்கைகளை வலுவான ஆதாரங்களுடன் உரத்த முழக்கத்தோடு பேசக் கூடிய கொள்கை பற்றாளர் ஆ.ராசா. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட போதும் தம் மீதான வழக்கில் தாமே வாதாடி வென்று காட்டியவர். அதனால்தான் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஆ.ராசாவை தகத்தகாய சூரியன் என உச்சிமோந்து புகழாரம் சூட்டினார். திராவிடர் இயக்க கொள்கைகளில் இம்மியும் பிசகாதவர்; தாம் ஏறுகிற திமுக மேடைகளை திராவிடர் இயக்க கொள்கை பரப்பு மேடைகளாக உருமாற்றி இளைய தலைமுறைக்கு வழிகாட்டியாக இருப்பவர். திமுகவில் பல முக்கியமான தலைமை கழக பொறுப்புகளுக்கு பலரது பெயரும் அடிபடுகிற போதெல்லாம் ஆ.ராசாவின் பெயரும் அந்த பட்டியலில் இடம்பெறுவது வழக்கம்.

ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக
அண்மையில் இந்துக்கள் என்றால் யார்? சூத்திரன் என்றால் யார்? மனுஸ்மிருதி என்னதான் சொல்லி இருக்கிறது என ஆ.ராசா பேசிய பேச்சு பெரும் பிரளயத்தையே கிளப்பிவிட்டது. தமிழக பாஜகவினர் ஆ.ராசாவின் இந்த பேச்சை மடைமாற்றிப் பார்த்தார்கள்.. போராடிப் பார்த்தார்கள்.. எதற்கும் அசையாமல் மவனே நீ வழக்கு போடு வா பார்க்கலாம் என கர்ஜித்தார் ஆ.ராசா. இப்போது ஆ.ராசாவுக்கு எதிரான மனுவை டிஸ்மிஸ் செய்தும்விட்டது ஹைகோர்ட்.

மிரட்டல் வரவேற்பு
இந்நிலையில் தமது லோக்சபா தொகுதியான நீலகிரிக்கு செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்திறங்கினார் ஆ.ராசா. அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என்ற பெயரில் பாஜகவினர் 50 பேர் ஒன்று கூடினர். அவர்களை கைது செய்து போலீஸ் அப்புறப்படுத்தியது. ஆனால் கோவை விமான நிலைய வாசல் தொடங்கி நீலகிரி வரை ஒவ்வொரு தொகுதி தோறும் ஆ.ராசாவுக்கு திமுகவினர் வெள்ளம் போல திரண்டு வந்து ஆகப் பெரும் வரவேற்பளித்துவிட்டனர். நீலகிரி லோக்சபா தொகுதியில் உள்ளடங்கிய அவினாசி, மேட்டுப்பாளையம், குன்னூர், கூடலூர், உதகமண்டலம் சட்டசபை தொகுதிகள் அனைத்திலும் பேரெழுச்சியான வரவேற்பு ஆ.ராசாவுக்கு கொடுக்கப்பட்டது.

காத்திருக்கிறதா புதிய பதவி?
அடுத்த லோக்சபா தேர்தலில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசாவுக்கு கடும் போட்டியை உருவாக்க பாஜக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது; உட்கட்சி பூசல்கள் கொண்டதாக நீலகிரி திமுக இருக்கிறது என்கிற விமர்சனங்கள் அனைத்துக்கும் பதில் தருவது போல கோவை டூ நீலகிரி வரை பிரம்மாண்ட வரவேற்பளிக்கப்பட்டிருக்கிறது ஆ.ராசாவுக்கு. பெரும்பாலான இடங்களில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் படங்களுடனான சுவரொட்டிகள் இடம்பெற்றிருந்தன. திமுகவில் எந்த 2-ம் கட்ட தலைவருக்கும் இல்லாத வரவேற்பு ஆ.ராசாவுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. திமுகவில் மு.க.அழகிரிக்காக தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது.. அதேபோல திமுகவில் மேற்கு மண்டல அமைப்பு செயலாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு அது ஆ.ராசாவுக்கு வழங்கப்பட்டாலும் ஆச்சரியமில்லை என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications