உதவி செய்த நீங்கள் கடவுளுக்கு சமம் - நஞ்சப்பாசத்திரம் மக்களிடம் ராணுவ தளபதி உருக்கம்
நீலகிரி: குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்ட நஞ்சப்பாசத்திரம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனை சார்பில் அடுத்த ஆண்டு டிசம்பர் 8ம் தேதி வரை மாதம் தோறும் இலவச மருத்துவ முகாம் நடைபெறும் என தென் பிராந்திய ராணுவ தளபதி A.அருண் அப்பகுதி மக்களிடம் கூறினார்.
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 8ஆம் தேதி , MI-17V5 ராணுவ ஹெலிகாப்டரில் நீலகிரி மாவட்டம் வெலிங்டன் இராணுவ பயிற்சி மையத்திற்கு சென்றனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சென்ற போது மோசமான வானிலை காரணமாக நஞ்சப்பாசத்திரம் என்ற இடத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இதில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த குரூப் கேப்டன் வருண் சிங்குக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் குன்னூர் நஞ்சப்பாசத்திரம் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து ஏற்பட்ட பகுதியில் தென் பிராந்திய தளபதி A.அருண் நேரில் சென்று பார்வையிட்டு, ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டு, ராணுவ வீரர்கள் உயிர் இழந்த பகுதியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ராணுவ தளபதி உருக்கம்
பின்னர் கிராம மக்களிடையே பேசும் போது, மீட்பு பணிகளை மேற்கொள்ள உதவி செய்த கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 8-ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உதவி செய்யாவிட்டால் 14 பேரையும் மீட்டு இருக்க முடியாது. உதவி செய்த நீங்கள் கடவுளுக்குச் சமமானவர்கள் என உருக்கமாகக் கூறினார்.

மக்களுக்கு மருத்துவசேவை
விபத்தில் இறந்தவர்களை மீட்க கம்பளி, தண்ணீர், பக்கெட், குடம் என வீட்டில் உள்ள பொருட்களை கொடுத்து உதவிய உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என கூறிய தளபதி A.அருண் , அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி வரை இந்த கிராமத்துக்கு மாதந்தோறும் ராணுவ மருத்துவ குழு அனுப்பி மருத்ததுவ சேவை வழங்க உள்ளோம் என்றார்.

நிவாரணம் வழங்கிய ராணுவம்
ஹெலிகாப்டர் விபத்து குறித்து முதலில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நஞ்சப்பா சத்திரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி, குமார் ஆகியோருக்கு ராணுவத்தின் சார்பாக தலா 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு கம்பளி, போர்வை மற்றும் நிவாரணப் பொருட்கள் இராணுவத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.

வசதிகள் செய்து தர உறுதி
அடிப்படைத் தேவைகள் குறித்து அப்பகுதி மக்களிடையே கேட்டறிந்த தென் பிராந்திய தளபதிA. அருண் அவர்களிடன், நஞ்சப்பாசத்திரம் பகுதியில் நடைபாதை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துத் தருவதாக அப்பகுதிகள் மக்கள்ளிடம் உறுதி கூறினார்.












Click it and Unblock the Notifications