ஒரே இரவில் போட்ட பக்கா பிளான்.. கூனிக்குறுகிய கூடலூரில் தாசில்தார் ராஜேஸ்வரி.. அதிரும் நீலகிரி
ஊட்டி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இரண்டரை கோடி ரூபாய் சொத்து உள்ள நிலத்தை அளக்க 2 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் பெண் தாசில்தார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தோட்டமூலா பகுதியை சேர்ந்த 34 வயதாகும் உம்மு சல்மா பட்டதாரி ஆவார். இவரது குடும்பத்தினருக்கு சொந்தமாக 3.27 ஏக்கர் நிலம் இருக்கிறது இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு உம்மு சல்மாவின் தாயார் காலமாகிவிட்டார். கடந்த ஆண்டு அவரது தந்தை மற்றும் சகோதரர்களும் இறந்து விட்டார்கள்.

இதனால் சொத்தில் தந்தையின் பங்காக 36 சென்ட் நிலம் உம்மு சல்மாவுக்கு வந்தது. மேலும் அவரது பெரியப்பா வகையில் 6 சென்ட் நிலம் எழுதி கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி கூடலூர் பகுதியில் தனக்கு மொத்தம் உள்ள 42 சென்ட் நிலத்தை எல்லை வரையறை செய்வதற்காக கடந்த 17.9.2023 அன்று கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரியிடம், உம்மு சல்மா விண்ணப்பித்தார். அதற்கு ரூ.820 கட்டணமும் செலுத்தி உள்ளார்.
அதன் பின்னரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கடந்த மார்ச் மாதம் 4ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் உம்மு சல்மா வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், 4-வது பிரதிவாதியாக கூடலூர் தாசில்தாரை நியமித்து உடனடியாக நில அளவீடு செய்து எல்லை வரையறை செய்யும்படி உத்தரவு பிறப்பித்தது.
அதன்பின்னர் நீலகிரி மாவட்டம் கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரியை, நிலத்தை அளக்க வேண்டும் என்று உம்மு சல்மா அணுகி உள்ளார். ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை பின்பற்றாமல் உம்மு சல்மாவிடம் கூடலூர் தாசில்தார் ராஜேஸ்வரி ரூ.2 லட்சம் லஞ்சம் கேட்டாராம்.
இதனால் அதிருப்தி அடைந்த உம்மு சல்மா, லஞ்சம் தர விரும்பவில்லை. அதேநேரம் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்க முடிவு செய்தார். அதன்படி ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்கள் தாசில்தார் ராஜேஸ்வரியை கையும், களவுமாக பிடிக்க திட்டமிட்டு நேற்று முன்தினம் இரவு உம்மு சல்மாவிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை கொடுத்து கூடலூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் ராஜேஸ்வரியை சந்திக்குமாறு கூறினார்கள்.
அதன் பின்னர் உம்மு சல்மா லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியபடி தாசில்தார் ராஜேஸ்வரியிடம் இவ்வளவு பணம் தான் என்னிடம் உள்ளது எனக்கூறி கொடுத்திருக்கிறார். அதை தாசில்தார் ராஜேஸ்வரி வாங்கி கொண்டார். அப்போது அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தார்கள். இந்த சம்பவம் நீலகிரி மாவட்டம் கூடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications