நீலகிரியில் ஆற்றோடு அடித்து செல்லப்பட்ட கார்.. அலறி துடித்த 3 பேர்.. தீயணைப்பு வீரர்கள் சபாஷ் செயல்
நீலகிரி: கோவை, நீலகிரியில் கனமழை கொட்டி வரும் நிலையில், ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டம் ஓவேலி அண்ணாநகர் சாலையில் தர்மகிரி நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென ஆற்றில் சிக்கியது. ஆற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் ஆற்று நீரில் கார் அடித்துச் செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த 3 பேரும் உதவிக் கேட்டு கூச்சல் போட்டனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் காரில் சிக்கிய 3 பேரையும் பத்திரமாக மீட்டனர்.
தமிழகத்தில் கோடைக்காலம் சீசன் என்பதே மறந்து போகும் அளவில் மழை கொட்டி வருகிறது. சென்னை, வேலூர் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் வெயில் அடித்து வருகிறது. எனினும் பெரிய அளவில் கடந்த 3 நாட்களாக வெயில் இல்லை. இதற்கிடையே கேரளாவில் நேற்று தென் மேற்கு பருவமழை தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

மடமடவென நிரம்பும் அணைகள்
ஏற்கனவே அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆகியவற்றின் காரணமாக தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய இடங்களில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் நீர் நிலைகளில் தண்ணீர் மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், சேர்வலாறு, கடனாநதி, தென்காசியில் உள்ள ராமநதி, அடவிநயினார் ஆகிய அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதேபோன்று குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து 3வது நாளாக குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நீலகிரியில் ஆற்றை கடந்து சென்ற கார் ஒன்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆற்றில் அடித்து செல்லப்பட்ட கார்
நீலகிரி மாவட்டம் ஓவேலி அண்ணாநகர் பகுதியில் தர்மகிரி செல்லும் சாலையில் கேரளாவை சேர்ந்த 3 பேர் காரில் வந்துகொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்ததால், கார் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் காரில் உள்ளவர்கள் உதவிக்கேட்டு அபயக்குரல் எழுப்பினர். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு படையினர் காரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதையடுத்து போராடி காரோடு ஆற்றில் சிக்கிய 3 பேரையும் பத்திரமாக மீட்டனர். கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டதால் அவர்கள் நிம்மதி பெருமூச்சு உட்டனர்.
ஒரே நாளில் 21.5 செமீ மழை
நேற்று நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக நீலகிரியில் அவலாஞ்சியில் நேற்று ஒரே நாளில் 21.5 செமீ மழை பெய்துள்ளது. எமரால்டு, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் தலா 9 செமீ மழை பெய்துள்ளது. கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகள் தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications