நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை.. அவலாஞ்சியில் 38 செ.மீ. பதிவு.. தென்மேற்கு பருவமழையில் இது அதிகம்
நீலகிரி: தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 38 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மண்சரிவு அபாயம் இருப்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. இருந்தாலும் கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தில் போதிய அளவு மழை பெய்யாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்றும் ஊட்டி, கூடலூர், அவலாஞ்சி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அவலாஞ்சியில் விடிய விடிய கனமழை கொட்டியது. அதிகபட்சமாக அங்கு 38 சென்டி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தொடர் மழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. உதகமண்டலத்தில் இருந்து பார்சன்ஸ்வேலி செல்லும் சாலையில் கவர்னர்சோலை பகுதியிலும் ஒரு மரம் நடுரோட்டில் முறிந்து விழுந்தது. இதனால் அங்கும் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.
ஓவேலி சாலையில் சோதனைச்சாவடியை அடுத்துள்ள கெவிப்பாறை பகுதியில் சாலையின் குறுக்கே மரம் நள்ளிரவு விழுந்தது. தகவல் அறிந்த கூடலூா் தீயணைப்பு நிலைய வீரர்கள், மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மின்சாரத்தை துண்டித்து மரத்தை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, காலையில் போக்குவரத்து சீரானது. மின்கம்பிகள் அறுந்ததால் கெவிப்பாறை, ஹெல்த்கேம்ப் ஆகிய பகுதிகள் இருளில் மூழ்கின.
இதனிடையே கோத்தகிரி அருகே கட்டபெட்டு பகுதியில் விடுதி கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணி நடந்தது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த யுவராஜ், மற்றும் குப்புசாமி ஆகியோர் அஸ்திவாரம் தோண்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது மண்சரிவு ஏற்பட்டு இருவரும் மண்ணுக்குள் புதைந்தனர். தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு 2 பேரையும் உயிருடன் மீட்டனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அப்பர் பவானியில் 10 சென்டிமீட்டர், தோவாலாவில் 9 சென்டிமீட்டர் மழையும் பந்தலூரிலும் ஓவேலி பகுதியிலும் 7 செமீ மழை பதிவாகியுள்ளது.தொடர்ந்து மழை பெய்து வருவதால் மண்சரிவு அபாயம் உள்ள இடங்களில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கவனமுடன் இருக்குமாறும் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.












Click it and Unblock the Notifications