பகலில் அரசு பஸ் டிப்போ.. இரவில் விபச்சார விடுதி.. சமூக விரோதிகள் அட்டூழியம்.. கொதிக்கும் மக்கள்
புவனேஸ்வர்: அரசு பஸ் டிப்போ ஒன்றையே சமூக விரோதிகள் விபச்சார விடுதியாக மாற்றிய அவலம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது.
விபச்சாரம் மட்டுமல்லாமல் போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களும் இங்கு நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், போலீஸாரும் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதால் இந்த அவலம் அங்கு தொடர்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

களைக்கட்டும் விபச்சாரம்
ஒடிசா தலைநகர் புவனேஸ்வருக்கு அருகே உள்ள புறநகர் பகுதி காந்தகிரி. இங்கு ஒடிசா அரசின் பஸ் டிப்போ ஒன்று செயல்பட்டு வருகிறது. புறநகர் பஸ்களும், சுற்றுலா பஸ்களும் இங்கிருந்து தான் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், காலையில் சாதாரண பஸ் டிப்போவாக காட்சியளிக்கும் இந்த இடம், இரவு 7 மணிக்கு மேலே விபச்சார விடுதியாகவும், போதைப்பொருள் பயன்படுத்தும் இடமாகவும் மாறிவிடும்.

பஸ்கள் முழுவதும் ஆணுறைகள்
டிப்போவில் நிற்கும் பழுதடைந்த பேருந்துகள் தான் விபச்சாரம் நடைபெறும் விடுதிகள். இதனால் அந்தப் பேருந்துகள் முழுவதும் ஆணுறைகளால் நிரம்பி இருக்கின்றன. விபச்சாரம் ஒருபுறம் இருக்க, போதைப்பொருள் கடத்தல்களும் இந்த இடத்தில் அதிகம் நடைபெறுகின்றன. அதுமட்டுமல்லாமல், வழிப்பறி, ஆள் கடத்தல் போன்ற குற்றங்களும் இங்கு இரவு நேரங்களில் நடைபெறுகின்றன. இதனால் மாலை 6 மணிக்கு மேலே, இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் யாரும் நடமாடுவதில்லை. அவ்வாறு அந்தப் பகுதிகளை கடப்போரின் பணம் மற்றும் உடைமைகளை ரவுடிகள் பறித்துக் கொள்வர்.

மிக அருகில் காவல் நிலையம்
இத்தனை குற்றங்கள் நடைபெறும் இந்த இடம் ஊருக்கு ஒதுக்குபுறமாக இருக்கும் என நீங்கள் நினைத்தால் அது தவறு. நகரின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இந்த பஸ் டிப்போ அமைந்துள்ளது. அதுவும் இந்த டிப்போவுக்கு 1 கிலோமீட்டர் தொலைவில்தான் காவல் நிலையமும் அமைந்துள்ளது. காவல் நிலையத்தின் அருகில் உள்ள ஒரு அரசு பஸ் டிப்போவையே விபச்சார விடுதியாக மாற்றும் அளவுக்கு, போலீஸாரின் நடவடிக்கைகள் அங்கு இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

போலீஸாரும் உடந்தை
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கூறுகையில், "இந்த அரசு பஸ் டிப்போ இரவில் விபச்சார விடுதியாக செயல்படுவது இங்கு அனைவருக்கும் தெரிந்ததுதான். இதனால் இரவில் இங்கு யாரும் வர மாட்டார்கள். போலீஸாருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் இதுதொடர்பாக பல முறை புகார் அளிக்கப்பட்டு விட்டது. ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. போலீஸாரே சில நேரங்களில் இங்கு வந்து செல்வதை பார்க்க முடியும். போலீஸாரின் ஒத்துழைப்பு இல்லாமல் இப்படியொரு குற்றம் நடக்க வாய்ப்பு கிடையாது. எனவே ஒடிசா அரசாங்கம் நேரடியாக தலையிட்டால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு ஏற்படும்" என்றார்.












Click it and Unblock the Notifications