"வெற்றிகரமான தோல்வி!" பிரான்ஸ் அதிபர் தேர்தல் தோல்வி! நம்ம ஊர் ஸ்டைலில் சமாளிக்கும் மரின் லு பென்
பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மரின் லு பென், அடுத்தகட்ட திட்டம் குறித்தும் விளக்கினார்.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டில் நேற்று இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. நேற்று காலை தொடங்கிய வாக்குப்பதிவு மாலை வரை அமைதியாக நடந்து முடிந்தது
இதற்காகப் புதுச்சேரி, தமிழகத்தில் உள்ள பிரான்ஸ் குடிமக்களும் வாக்களித்தனர். இதில் தற்போதைய அதிபர் இமானுவேல் மக்ரோன் மற்றும் மரைன் லு பென் ஆகியோர் நேரடியாக மோதினர்.
பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் இமானுவேல் மேக்ரான்!
பிரான்ஸ் தேர்தல்
பிரான்ஸ் நாட்டில் அதிபர் தேர்தலில் வெல்லக் குறைந்தது 50% வாக்குகளைப் பெற்று, absolute majority பெற வேண்டும். ஆனால், கடந்த ஏப்ரல் 10இல் நடைபெற்ற முதற்கட்ட தேர்தல் யாருக்கும் absolute majority கிடைக்கவில்லை. அதிகபட்சமாக மக்ரோன் 27.85% வாக்குகளையும் மரைன் லு பென் 23.15% வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே தான் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மக்ரோன் இரண்டாவது முறையாக வென்றார்.
திரும்பிய வரலாறு
இந்தத் தேர்தலில் மக்ரோன் 58% வாக்குகளைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட மரின் லு பென் வெறும் 42% வாக்குகளை மட்டுமே பெற்றார். கடந்த 2017 அதிபர் தேர்தலிலும் கூட இவர்கள் இருவருக்கும் இடையே தான் இரண்டாம் கட்ட தேர்தல் நடந்தது. அதில் 66.10% வாக்குகளைப் பெற்று மக்ரோன் வெற்றி பெற்றார். இப்போது 2022ஆம் ஆண்டிலும் அதே வரலாறு திரும்பி உள்ளது. மரின் லு பென்னால் வலதுசாரி வாக்குகளைக் கவர முடிந்த போதிலும், இடதுசாரி மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் வாக்கு அவர் பக்கம் செல்லவில்லை இதுவே தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
கைவிடமாட்டேன்
தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், இதர தோல்வி அடைந்த வேட்பாளர்கள் உடன் மரின் லு பென் செய்தியாளர்களைச் சந்தித்தார். தேர்தலில் தோற்ற போதிலும் மரின் லு பென், இத்தேர்தல் முடிவு ஒரு சிறந்த வெற்றி என்று குறிப்பிட்டார். மேலும், என்னவனாலும் அரசியல் வாழ்க்கையைத் தொடர்வேன் என்று உறுதி அளித்த 53 வயதான மரின் லு பென், பிரான்ஸ் மக்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என்றும் தெரிவித்தார்.
வெற்றிகரமான தோல்வி
இது குறித்து மரின் லு பென் மேலும் கூறுகையில், "நாம் பிரதிநிதித்துவம் செய்த யோசனைகள் இப்போது புதிய உயரங்களை எட்டியுள்ளன. இந்த தேர்தல் முடிவு ஒரு அற்புதமான வெற்றியைக் காட்டுகிறது. அடுத்து நடக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான போரை இப்போது இதே இடத்தில் இருந்து நாங்கள் தொடங்குகிறோம். எனக்கு நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாகச் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் பெரியளவில் வெற்றி பெறுவோம்" என்று தெரிவித்தார்.