ரபேல் போர் விமான டீலிங்கில் இடைத் தரகருக்கு லஞ்சம்.. ஆதாரமிருந்தும் விசாரிக்காத சிபிஐ: வெளியான தகவல்
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனம், 7.5 மில்லியன் யூரோக்கள் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 64,26,74,800 பணத்தை, இந்தியாவைச் சேர்ந்த இடைத்தரகர் சுசேன் குப்தா என்பவருக்கு கொடுத்ததாகவும், இந்த விவரங்கள் இருந்தும் கூட இந்தியாவில் புலனாய்வு அமைப்பு சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை ஆகியவை விசாரணை நடத்தவில்லை என்றும் பிரான்சு நாட்டைச் சேர்ந்த புலனாய்வு செய்தி வெப்சைட் Mediapart செய்தி வெளியிட்டுள்ளது.
இடைத்தரகருக்கு, பணம் கொடுப்பதற்காக போலியான இன்வாய் ஸ் உருவாக்கப்பட்டது. இந்த ஆதாரங்கள் இருந்தாலும்கூட சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்த முன்வரவில்லை என்கிறது அந்த வெப்சைட்.
மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றபோது, 2012ம் ஆண்டு, 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்க முடிவு செய்யப்பட்டது. இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும் என்றும், முடிவானது.

ரபேல் ஒப்பந்தம்
2014ம் ஆண்டு மே மாதம் மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம், பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றார். அப்போது, முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக அறிவித்தார். 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார். இதையடுத்து 2016ம் ஆண்டு, செப்டம்பரில் ரஃபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஊழல் குற்றச்சாட்டு
இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளது என்பது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் சீனியர் தலைவர்களின் குற்றச்சாட்டாக இருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு நடைபெற்ற நிலையில், ஊழல் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றமும் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.

சிபிஐ விசாரிக்கவில்லை
இந்த நிலையில் மீடியாபார்ட் வெப்சைட் வெளியிட்டுள்ள செய்தியில், சுசேன் குப்தா என்ற இடைத் தரகருக்கு டஸால்ட் நிறுவனம் லஞ்சப் பணத்தை வழங்கியது. மொரிஷியஸ் நாட்டில் போலியாக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து இந்த லஞ்சப் பணத்தை இடைத்தரகர் சுசேன் குப்தா வாங்கியிருக்கிறார். மொரிசியஸ் அதிகாரிகளும் இந்த ஆவணங்களை சிபிஐ மற்றும் அமலாக்கத் துறைக்கு அனுப்பி வைத்தனர். 2018 ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி அதாவது ரபேல் விமானங்களை வாங்கியதில் ஊழல் இருப்பது தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட பிறகு ஒரு வாரத்தில் இந்த ஆவணங்கள் சிபிஐ கைக்கு கிடைத்தன. ஆனால் சிபிஐ இதுதொடர்பாக விசாரணை நடத்தாமல் இருக்க முடிவு செய்தது.

இடைத்தரகர் சுசேன் குப்தா
2007-ம் ஆண்டு முதல் 2012ஆம் ஆண்டுவரை 7.5 மில்லியன் ஈரோ பணத்தை விமான நிறுவனத்திடம் இருந்து சுசேன் குப்தா நிறுவனம் பெற்றுள்ளது. அமலாக்கத்துறையிடம் உள்ள ஒரு ஆவணத்தில் சுசேன் குப்தா லஞ்ச பணம் வழங்கியது தொடர்பான ஒரு தகவல் இடம்பெற்றுள்ளது. டசால்ட் நிறுவனத்தின் சார்பாக இந்திய அதிகாரிகளுக்கு பணம் கொடுத்துள்ளதாகவும், அலுவலகத்தில் இருப்பவர்கள் பணம் கேட்பதாகவும் ஒருவேளை நாம் பணம் தராவிட்டால் சிறையில் தள்ளி விடுவார்கள் என்றும் கூறியிருக்கிறார். 2012ஆம் ஆண்டு (காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சி காலம்) செப்டம்பர் மாதம் இந்த தகவலை அவர் டசால்ட் நிறுவனத்துக்கு அனுப்பி இருக்கிறார்.

பாஜக ஆட்சி காலத்திலும் மூக்கை நுழைத்த இடைத்தரகர்
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட பிறகு பாஜக ஆட்சி அமைந்த பிறகு நரேந்திர மோடி அரசு மீண்டும் ஒப்பந்தம் செய்தது. ஆனால், 2015ஆம் ஆண்டு இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வைத்திருந்த ரபேல் விமானங்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் சுசேன் குப்தாவிடம் இருந்துள்ளன. ரபேல் விமானங்களை கொள்முதல் செய்ய, அரசிடம் என்ன மாதிரி திட்டங்கள் இருந்தன, விமானத்தின் விலையை இந்திய அதிகாரிகள் எவ்வாறு கணக்கீடு செய்கிறார்கள் என்பது போன்ற தகவல்கள் இடைத்தரகர் சுசேன் குப்தாவிடம் இருந்துள்ளன. இதற்கான ஆதாரங்களும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் சிக்கியுள்ளன. இவ்வாறு அந்த வெப்சைட் தெரிவித்துள்ளது . டசால்ட் நிறுவனத்திடம் கருத்து கேட்க முற்பட்டபோது அவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்த வெப்சைட் தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications