ஓரினச்சேர்க்கையாளரை தேடிப்போன பிரான்ஸ் பிரதமர் பதவி! யார் இந்த கேப்ரியல்? மேக்ரானுக்கு புதுசிக்கல்
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய பிரதமராக 34 வயது நிரம்பிய ஓரினச்சேர்க்கையாளரான கேப்ரியல் அட்டல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட பதவிகள் இருப்பது போல் பல வளர்ந்த நாடுகளில் அதிபர் , பிரதமர் பதவிகள் உள்ளன. இந்தியாவில் குடியரசு தலைவரை விட பிரதமருக்கு தான் அதிக அதிகாரம் உண்டு. ஆனால் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் பிரதமரை காட்டிலும் அதிபருக்கு தான் அதிக அதிகாரம் இருக்கிறது.

அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் அதிபராக இருப்பவர் இமானுவேல் மேக்ரான். இவர் இந்தியாவுடன் நெருக்கமான உறவு வைத்தார். பிரதமர் மோடியுடன் நெருங்கிய நட்பில் உள்ளார். மேலும் வரும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் இவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில் தான் பிரான்ஸில் தற்போது இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக மக்கள் திரும்பி உள்ளனர். கடந்த ஆண்டு ஓய்வூதியம் மற்றும் குடியுரிமை சட்டத்திட்ட திட்டத்தில் அவர் கொண்டு வந்த அதிரடி மாற்றங்கள் என்பது இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக மக்களை திருப்பி உள்ளது. இதனால் அவரது செயல்பாட்டில் மக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
இதற்கிடையே தான் பிரான்ஸ் பிரதமராக இருந்த எலிசபெத் போர்ன் திடீரென்று ராஜினாமா செய்தார். பிரான்சின் பிரதமராக பொறுப்பேற்ற 2 வது பெண் என்ற பெருமையை பெற்ற அவர் திடீரென்று ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து அடுத்த பிரதமராக யாரை நியமனம் செய்வது என்ற கேள்வி எழுந்தது.
இதில் கேப்ரியல் அட்டல் என்பவரின் பெயர் இருந்தது. 34 வயது மட்டுமே நிரம்பிய கேப்ரியல் அட்டல் ஓரினச்சேர்க்கையாளர் என தன்னைத்தானே அறிவித்து கொண்டவர். இவர் இமானுவேல் மேக்ரானின் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராவும், அரசின் செய்தி தொடர்பாளராகவும் செயல்பட்டு வரும் நிலையில் தற்போது பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அலுவலகம் முறைப்படி அறிவித்துள்ளது.
புதிய பிரதமராக நியமனம் செய்யப்பட்டுள்ள கேப்ரியல் அட்டலுக்கு 34 வயது மட்டுமே ஆகும் நிலையில் அவர் பிரான்சின் இளம்வயது பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கும் இமானுவேல் மேக்ரானுக்கும் இடையே நெருங்கிய உறவு உள்ளது. கல்வித்துறை மற்றும் பிரச்சனைகளை அணுகுவதில் கேப்ரியல் அட்டலின் செயலால் இமானுவேல் மேக்ரான் ஈர்க்கப்பட்டார். அதோடு கேப்ரியல் அட்டலுக்கு மக்கள் மத்தியிலும் நல்ல செல்வாக்கு உள்ளது.
தற்போது பிரான்சில் இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக மக்கள் உள்ளனர். இந்த சந்தர்ப்பத்தில் கேப்ரியல் அட்டலை பிரதமராக நியமனம் செய்தால் மக்கள் ஓரளவு சமாதானம் அடைவார்கள் என இமானுவேல் மேக்ரான் நினைத்து இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும் இந்த நடவடிக்கை என்பது இமானுவேல் மேக்ரானுக்கு எதிராக மாறலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால் பிரான்சில் கடந்த 2022ல் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் இமானுவேல் மேக்ரான் வெற்றி பெற்றார். ஆனால் குறுகிய காலத்தில் அவர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார். மீண்டும் 2027 ல் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சமீபத்தில் கருத்து கணிப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில் இமானுவேல் மேக்ரானிடம் தோல்வியடைந்த மரைன் லு பென்னின் செல்வாக்கு என்பது அதிகரித்துள்ளது தெரியவந்தது.
இதனால் எதிர்காலத்தில் இமானுவேல் மேக்ரானின் செல்வாக்கு குறையும்போது அவரது கட்சி சார்பில் அடுத்த அதிபர் வேட்பாளராக போட்டியிட கேப்ரியல் அட்டல் முயற்சி செய்யலாம். அப்படி நடந்தால் அது இமானுவேல் மேக்ரானின் எதிர்காலத்துக்கு செக் வைக்கும் வகையில் அமையலாம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications