100 நாள் சபதம்.. மூட்டைப் பூச்சியைப் பார்த்தால் உடனே போன் பண்ணுங்கள்.. அவசர எண்ணை அறிவித்த பிரான்ஸ்!
பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை கொல்ல அரசு அவசர எண்ணை அறிவித்துள்ளது.
பாரீஸ்: மூட்டைப் பூச்சிகளின் தொல்லையால் பிரான்ஸ் நாட்டு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
கொசுத்தொல்லையைப் போலவே மூட்டைப் பூச்சி தொந்தரவும் சகிக்க முடியாதது. கையில் அகப்படாத அளவு சிறியதாக இருக்கும் மூட்டைப் பூச்சிகள் இரவுகளில் தூங்க விடாமல் படுத்தும் பாடு சொல்ல இயலாதது.

முன்பெல்லாம் பழைய சினிமா கொட்டகைகளில் தான் நாம் அதிகம் மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவுக்கு ஆளாவோம். ஆனால் பிரான்ஸ் நாட்டில் வீடுகளுக்குள்ளேயே மூட்டைப் பூச்சுகளின் தொந்தரவு அதிகரித்துள்ளது. அந்த நாட்டில் தற்போது மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு மிக அதிகமாக இருக்கிறது.
வீடுகளில் உள்ள மெத்தைகளில் மூட்டைப் பூச்சிகளின் தொந்தரவு அதிகமாக இருப்பதால், அந்நாட்டு மக்கள் உறக்கத்தை தொலைத்து செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதனால் அந்நாட்டு அரசு, மூட்டைப் பூச்சிகளை ஒழிப்பதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மூட்டைப் பூச்சிகளை கொல்ல அரசு அவசர எண் ஒன்றையும் அறிவித்துள்ளது.
வீடு மற்றும் ஓட்டல்களில் மூட்டைப் பூச்சிகளைக் கண்டால் உடனே அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவியை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 100 நாட்களுக்குள் அனைத்து மூட்டைப் பூச்சிகளையும் ஒழிக்க வேண்டும் என பிரான்ஸ் அரசு சபதம் எடுத்துள்ளது.
அதோடு மூட்டைப் பூச்சிகளை அடியோடு ஒழிக்கும் வரை மெத்தைகள் மற்றும் சோபாக்களை அதிகம் பயன்படுத்த வேண்டாம் எனவும் மக்களை அந்நாட்டு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
மற்ற பூச்சிகளைப் போல் தொற்றுநோய் எதையும் மூட்டைப் பூச்சிகள் பரப்புவதில்லை. ஆனால் ஒரே இரவில் 90 முறை கடிக்கும் அளவிற்கு சக்தி வாய்ந்தவை மூட்டைப் பூச்சிகள். இதனாலேயே தோலில் தடிப்பு மற்றும் அலர்ஜி போன்ற பிரச்சினைகள் மக்களுக்கு ஏற்படுகின்றன. இதனாலேயே மூட்டைப் பூச்சிகளை ஒழிக்க பிரான்ஸ் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications