பிரான்ஸில் முகமது நபியின் கார்ட்டூன்களைக் காட்டி பாடம் நடத்திய ஆசிரியர் தலை துண்டித்துக் கொலை
பாரிஸ்: வகுப்பறையில் முகமது நபியின் கார்ட்டூன்களைக் காட்டி பாடம் நடத்திய பிரெஞ்சு ஆசிரியர், பள்ளிக்கு வெளியே தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது "இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல்" என்று சம்பவத்தை நேரில் பார்வையிட்ட பின்னர் கடுமையாக பேசினார்.
பிரெஞ்சு தலைநகர் பாரிஸில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில், பாரிஸின வடமேற்கு புறநகர்ப் பகுதியான கான்ஃப்லான்ஸ் செயிண்ட்-ஹொனொரைனில் பள்ளி ஒன்றில் வரலாற்று ஆசிரியர் ஒருவர் பணிபுரிந்தார்.
அங்கு அவர் மாணவர்களிடம் முகமது நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன்களை காட்டி கருத்து சுதந்திரம் பற்றியும் வகுப்பு வாதம் பற்றி பாடம் எடுத்துள்ளார். அப்போது கார்ட்டூன்களைக் காண்பிப்பதற்கு முன்பு முஸ்லீம் மாணவர்களை அறையை விட்டு வெளியேறும்படி கேட்டு ஆசிரியர் "சர்ச்சையை" கிளப்பியதாக கூறப்படுகிறது.

ஆசிரியர் கொலை
இதையடுத்து மாலை 5 மணி அளவில் திடீரென துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் கும்பலாக சிலர் பள்ளிக்கு வந்துள்ளனர். அவர்கள் வரலாற்று ஆசிரியரை பள்ளிக்கு வெளியே சுற்றி வளைத்து தாக்கி தலை துண்டித்து படுகொலை செய்தனர். இதை கண்டு மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்றனர்.

4 பேர் கைது
அப்போது ஆசிரியரை கொன்ற மர்ம நபர் போலீசாரை தாக்க முயன்றதால் சண்டை நடந்தது. இதில் போலீசார் அந்த மர்மநபரை சுட்டுக்கொன்றனர். அத்துடன் 18 வயது நிரம்பாத சிறுவன் உட்பட நான்கு பேரை கைது செய்தனர்.

பிரான்ஸ் அதிபர் மக்ரோன்
இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்ட பின்னர் பேசுகையில் இந்த கொலை "ஒரு இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலின்" அடையாளங்களைக் கொண்டுள்ளது. "முழு தேசமும்" ஆசிரியர்களைப் பாதுகாக்கத் தயாராக உள்ளது என்றார்.

18 வயது இளைஞர்
இதனிடையே ஆசிரியரை கொன்ற இளைஞர் 2002 இல் ரஷ்யாவின் மாஸ்கோவில் பிறந்தவர் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் அவரை பற்றி முழு அடையாளம் தெரிந்த பின்னர் விவரம் தெரிவிக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

வெடிகுண்டு இருந்ததா?
வெடிகுண்டுகள் அவர்கள் வைத்திருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த போலீசார் அங்கு வெடிகுண்டு நிபுணர்களை அழைத்து சோதனையும் செய்தனர். இந்த சம்பவம் பிரான்ஸில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் எம்பிக்கள் பலர் ஆசிரியர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications