"நள்ளிரவில் திக்திக்!" பிரான்ஸ் மேயர் வீட்டில் புகுந்து தீ வைப்பு.. மனைவி & குழந்தை காயம்! பதற்றம்
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் இப்போது உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கே மேயர் வீட்டிற்குள் புகுந்து போராட்டக்காரர்கள் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுமொத்தமாக பிரான்ஸ் நாடு முழுக்க இப்போது போர் சூழல் நிலவி வருகிறது. திரும்பிய பக்கமெல்லாம் வன்முறை போராட்டங்கள் தான் நடந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ள போதிலும், அது பெரியளவில் கை கொடுக்கவில்லை.

வன்முறை: அங்கே 17 வயதான நஹெல் என்ற சிறுவனை போலீசார் சுட்டுக் கொன்றதைத் தொடர்ந்து வன்முறை பரவியிருக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் போலீசாரின் அத்துமீறல் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராடி வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை பாரீஸ் புறநகர்ப் பகுதியில் நஹெல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்ட நிலையில், அதன் பிறகு வன்முறை படிப்படியாகக் குறைந்து வருவதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்தார். இருப்பினும், இன்னும் பல இடங்களில் வன்முறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. நேற்றைய தினம் பாரீஸுக்கு தெற்கே உள்ள எல்'ஹே-லெஸ்-ரோஸஸ் நகரின் மேயரின் வீட்டிற்குள் கலவரக்காரர்கள் நுழைந்துள்ளனர். அங்கே மேயரின் வீட்டைக் காரை கொண்டு மோதியுள்ளனர்.
தீ வைக்க முயற்சி: இத்தாக்குதலில் தனது மனைவி மற்றும் ஒரு பிள்ளை காயமடைந்துள்ளதாக மேயர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அந்த நகரின் மேயர் வின்சென்ட் ஜீன்ப்ரூன் தனது ட்விட்டரில், "எனது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், அப்போது உள்ளே நுழைந்த போராட்டக்காரர்கள் தீ வைக்க முயன்றுள்ளனர்.
இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. நேற்று இரவு நடந்த இந்தச் சம்பவம் அவமானகரமானது. இதில் எனது மனைவி மற்றும் குழந்தைகளில் ஒருவருக்குக் காயம் ஏற்பட்டது. இது கோழைத்தனத்தின் வெளிப்பாடு" என்று பதிவிட்டுள்ளார்.

போலீசார் குவிப்பு: கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் உடன் 45,000க்கும் மேற்பட்ட போலீசார், பிரான்சின் மூன்று பெரிய நகரங்களான பாரிஸ், லியோன் மற்றும் மார்செய்ல் இறக்கப்பட்டுள்ளனர். அங்கே அவர்கள் தொடர்ந்து ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வன்முறைச் சம்பவங்களால் 10 வணிக வளாகங்கள், 200க்கும் மேற்பட்ட சூப்பர் மார்கெட்கள், 250 வங்கிகள் சூறையாடப்பட்டதாக நிதியமைச்சர் புருனோ லு மெய்ர் தெரிவித்தார்.
மேலும், கிரிக்னியில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஐந்தாவது நாளான நேற்று 719 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், 1,300 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர். இம்மானுவேல் மக்ரோன் அரசு முறை பயணமாக ஜெர்னமி நாட்டிற்குச் செல்லவிருந்த நிலையில், இந்தப் போராட்டம் காரணமாகத் தனது பயணத்தை ரத்து செய்து உள்நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அங்கே இந்த போராட்டத்தில் டீன் ஏஜ் இளைஞர்களே பெருந்திரளாகக் கலந்து கொண்டு வருகிறார்கள். இதனால் பெற்றோர்கள் தங்கல் குழந்தைகளை வன்முறை பாதையில் செல்வதைத் தடுத்து நிறுத்தி, கலவரத்தைக் கட்டுப்படுத்த உதவுமாறு இம்மானுவேல் மக்ரோன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும், தற்போது வரை அங்கே பெரியளவில் வன்முறை குறையவில்லை.
என்ன காரணம்: நஹெல் என்ற 17 வயது சிறுவனை நிறுத்தி விசாரித்த போலீசார், அவரது தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளனர். இதனால் பயத்தில் அஞ்சி அந்த இளைஞர் காரை எடுத்து கிளம்ப முயன்ற போது, போலீசார் அவரை மிக மிக அருகில் இருந்தபடி சுட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications