ஒலிம்பிக் நேரத்தில் இப்படியா.. பிரான்ஸில் பெரிய தாக்குதல்! அதிர்ந்த அதிகாரிகள்.. 8 லட்சம் பேர் அவதி
பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று தொடங்கும் நிலையில், அதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு பிரான்ஸ் ரயில்வே நெட்வோர்க்கை குறிவைத்து மிகப் பெரிய தாக்குதல் நடந்துள்ளன. இதில் யாருடைய உயிருக்கும் பாதிப்பு இல்லை என்ற போதிலும் ரயில் பாதை முழுமையாக முடங்கிப் போய் இருக்கிறது. இதனால் சுமார் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு உலகில் மிக முக்கியமான போட்டி என்றால் சந்தேகமே இல்லாமல் அது ஒலிம்பிக் போட்டிகள் தான்.. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் உலகின் பல்வேறு நாடுகளும் கலந்து கொள்ளும்.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இங்குப் பலரது லட்சியமாக இருக்கும். இந்த முறை ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெறுகிறது.
தாக்குதல்: ஒலிம்பிக் போட்டிகள் பாரிஸில் இன்று கோலாகலமாகத் தொடங்குகிறது. இதற்கிடையே தொடக்க விழாவுக்கு சில மணி நேரம் முன்பு பிரான்சின் அதிவேக ரயில் நெட்வொர்க் மீது தாக்குதல்கள் நடந்துள்ளது. சில இடங்களில் தீ வைப்பு சம்பங்களும் நடந்துள்ளன. இதனால் பிரான்ஸ் நாட்டின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நல்வாய்ப்பாக இதில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.
ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடந்துள்ளதாகவும் இதைப் பார்க்கும் போது இவை ஒருங்கிணைக்கப்பட்ட நாசவேலை போலவே தெரிவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பு ரயில் நெட்வோர்க்கை முடக்க வேண்டும் என்பதற்காகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முடக்கம்: இது குறித்து அந்நாட்டின் ரயில்வே இயக்குநர் கூறுகையில், "இரவோடு இரவாக யாரோ சில விஷமிகள் இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். பல இடங்களில் தீ வைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் எங்கள் ரயில் பாதைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில் பாதைகளைச் சரி செய்யும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். இந்த பணிகள் வார இறுதி வரை நீடிக்கும்" என்றார்.
8 லட்சம் பேர்: இந்தத் தாக்குதலை மிக மோசமா கிரிமினல் செயல் என்று அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சர் பேட்ரிஸ் வெர்கிரிட் தெரிவித்தார். வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு பிரான்ஸிற்கான இணைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இதனால் ரயில்களின் எண்ணிக்கை பாதியாகக் குறையும் என்றும் இதனால் சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நாசவேலை காரணமாக ரயில்களை மாற்றுப்பாதையில் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் போதிலும் ஏகப்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், நிலைமை மோசமாக இருப்பதால் பயணங்களை ஒத்திவைக்கவும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஒலிம்பிக்: இன்று நடக்கும் பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் சுமார் 3 லட்சம் பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பிரான்ஸ் நகரில் வரலாறு காணாத அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அனைத்தையும் தாண்டி பிரான்ஸில் இதுபோன்ற தாக்குதல் நடந்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளன. வீரர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications