இந்தியா ராஜதந்திரம்! பிரான்ஸ் நாடாளுமன்றத்தில் பாக்.ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி நிகழ்வுக்கு தடை
பாரிஸ்: தொடர்ச்சியான ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி மசூத் கான் பங்கேற்பதை இந்தியா தடுத்து நிறுத்தி உள்ளது.
பாரிஸில் உள்ள இந்திய அதிகாரிகள். பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகத்தில் ஆட்சேபம் தெரிவித்ததையடுத்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி இந்த நிகழ்வில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் செப்டம்பர் 24ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி மசூத் கான் அழைக்கப்பட்டார்.
பலரும் புகாரால் தடை
இதற்கு இந்திய அதிகாரிகள் மற்றும் இந்தியாவில் இருந்து பிரான்ஸில் குடிபெயர்ந்தோர் பலர் அந்நாடடு வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு எதிர்ப்பு தெரித்து மெயில் அனுப்பினர். இது இந்தியாவின் இறையாண்மையை மீறும் செயல் என புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஜனாதிபதி மசூத் கானை நிகழ்ச்சியில் பங்கேற்க பிரான்ஸ் அரசு தடை செய்தது.
பிரான்ஸில் எடுபடவில்லை
இதையடுத்து கான் சார்பாக பாகிஸ்தான் தூதர் மொயின்-உல் ஹக் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்வு பிரான்ஸ் மக்களிடையே கவனம் ஈர்க்கவில்லை. இதில் பங்கேற்றவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் தான். இதன் மூலம் காஷ்மீர் குறித்த பாகிஸ்தானின் கதை பிரான்ஸில் எடுபடவில்லை.
கான் உடனான தேநீர் விருந்து
முன்னதாக நெருக்கடி காரணமாக செப்டம்பர் 23ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஜனாதிபதி மசூத் கானுடனான ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தேநீர் விருந்து நிகழ்ச்சியையும் பாகிஸ்தான் தூதர் மொயின்-உல் ஹக் ரத்து செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்தியஸ்தம் தேவையில்லை
காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான இரு தரப்பு விஷயம் என்றும் இதில் சர்வதேச மத்தியஸ்தம் தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலும் பிரான்ஸ் உறுதியாக உள்ளது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி பாரிஸ் அருகே பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோனுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையின் போது எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுக்கு பிரான்ஸ் ஆதரவு அளித்தது.