அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி.. ஏர்போர்ட்டில் கட்டித் தழுவி வழியனுப்பி வைத்த பிரான்ஸ் அதிபர்!
பாரிஸ்: பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி. மார்செய்ல்ஸ் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டித் தழுவி வழியனுப்பி வைத்தார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் முதலாவது சர்வதேச செயற்கை நுண்ணறிவு செயல் உச்சிமாநாடு நேற்று நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக மூன்று நாள் பயணமாக பிரான்ஸுக்கு கடந்த திங்கள்கிழமை சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுடன் இணைந்து பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

பிரான்ஸின் மார்செய்லே நகரில் கட்டப்பட்டுள்ள இந்திய தூதரக அலுவலகத்தை பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இணைந்து இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் பிரதமர் மோடி. மார்செய்ல்ஸ் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கட்டித் தழுவி வழியனுப்பி வைத்தார்.
2 நாள் பயணமாக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசுகிறார். அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றபின் முதல் முறையாக அவரை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார்.

வாஷிங்டனில் நடைபெற உள்ள இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளின் உறவு குறித்து பேச இருக்கின்றனர். குறிப்பாக, இந்தியா - அமெரிக்கா நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக உறவு கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது. தற்போது, அமெரிக்காவின் முக்கிய இரு வர்த்தக நாடுகளான மெக்சிகோ மற்றும் கனடாவில் இருந்து இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனப் பொருட்களுக்கு 10 சதவீத வரியையும் அதிபர் டிரம்ப் விதித்துள்ளார்.
இதனால், அமெரிக்காவுக்கு தொழில்நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்ய இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே, பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின் போது, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு குறித்த பேச்சுவார்த்தை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications