ஆற்றில் பாய்ந்த சரக்கு ரயில்.. 10 பெட்டிகள் கவிழந்து விபத்து! ரயில் போக்குவரத்து பாதிப்பு
பாட்னா: பீகார் மாநிலம் ஜாமுய் மாவட்டத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியிருக்கிறது. இந்த விபத்தில் 10 பெட்டிகள் தடம் புரண்டு ஆற்றில் கவிழ்ந்துள்ளன. இதன் காரணமாக ஹவுரா - பாட்னா - டெல்லி வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விபத்தில் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு ரயில்வேயின் அசன்சோல் கோட்டத்திற்குட்பட்ட லகாபான் மற்றும் சிமுல்தலா ரயில் நிலையங்களுக்கு இடையே, இந்த விபத்து நடந்திருக்கிறது. நேற்றிரவு சுமார் 11.25 மணியளவில் இந்த விபத்து நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், சுமார் இருபதுக்கும் மேற்பட்ட ரயில்களின் இரவுநேரப் போக்குவரத்து தடைபட்டு, பயணிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கிழக்கு ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர். அசன்சோல், மதுபூர் மற்றும் ஜாஜா நிலையங்களிலிருந்து மீட்பு ரயில்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தடங்களைச் சரிசெய்யும் மற்றும் சீரமைப்புப் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சரக்கு ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட தடங்கலின் காரணமாக, பல விரைவு மற்றும் பிற பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளன, மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளன என்று கிழக்கு ரயில்வே அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளனர். ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரம்
- 12369 ஹவுரா-டேராடூன் கும்ப எக்ஸ்பிரஸ்
- 13105 சீல்டா-பல்லியா எக்ஸ்பிரஸ்
- 13030 மோகாமா-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் பல மெமு ரயில்கள் அடங்கும்.
- 12305 ஹவுரா-புது டெல்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ்
- 22347 ஹவுரா-பாட்னா வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- 22500 வாரணாசி-தேவ்கர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- 22499 தேவ்கர்-வாரணாசி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
- 13332 பாட்னா-தன்பாத் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் தன்பாத்-கயா மற்றும் பிற மாற்றுப் பாதைகளில் திருப்பிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications