2 மணிநேரம் தான்.. பீகாரில் 16 பேரின் உயிரை குடித்த வெயில்.. அடுத்தடுத்து பலியான பெரும்சோகம்
பாட்னா: பீகாரில் வெறும் 2 மணிநேரத்தில் 16 பேரின் உயிரை பலி வாங்கி உள்ளது வெயில். அதிகப்படியான வெயில் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 16 பேர் 2 மணிநேரத்தில் அடுத்தடுத்து பலியாகினர்.
டெல்லி உள்பட பல்வேறு வடமாநிலங்களில் கோடை வெப்பம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பல இடங்களில் வெப்பஅலை வீசி வருகிறது.
இந்த கோடை வெயிலின் அகோர பிடியில் பீகாரும் சிக்கி உள்ளது. பீகாரில் பல இடங்களில் 48 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பநிலை பதிவாகி வருகிறது.

இந்நிலையில் தான் நேற்றைய தினம் பீகாரின் அவுரங்காபாத் நகரில் அதிகப்படியாக 48.2 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவானது. இதனால் ஏராளமான மக்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். சுமார் 35க்கும் அதிகமானவர்கள் அதிகப்படியான வெயிலை தாங்க முடியாமல் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் அவுரங்கபாத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் கூட சிகிச்சை பலன் அளிக்காமல் 16 பேர் இறந்தனர். மருத்துவ சிகிச்சையில் இருந்தபோதே 2 மணிநேரத்தில் அடுத்தடுத்து இவர்கள் பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் இன்னும் ஒருவாரம் வரை அதிகப்படியான வெயில் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். இதனால் பீகாரில் பள்ளிகள், அங்கன்வாடிகள் திறப்பு என்பது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு செய்க்புரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் அடுத்தடுத்து 16 மாணவிகள் மயங்கி விழுந்தனர். அதேபோல் பெகுசாராய், ஜாமி உள்ளிட்ட இடங்களிலும் பள்ளி மாணவ-மாணவிகள் கடும் வெயில் காரணமாக மயங்கினர். இதனால் பீகாரில் பள்ளிகள் திறப்பு என்பது ஜுன் 8 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் வெப்பஅலை மற்றும் வெயில் காரணமாக மதிய வேளைகளில் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகங்கள் எச்சரிக்கை செய்துள்ளன. இத்தகைய சூழலில் தான் இன்று கடும் வெயிலால் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவுரங்காபாத் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 16 பேர் அடுத்தடுத்து பலியாகி உள்ளனர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications