ஒரு சீட் கூட இல்லை... பீகாரில் மண்ணை கவ்விய லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம்!!
பாட்னா: பீகாரில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் மண்ணை கவ்வி உள்ளது.
பீகாரில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி(ஆர்ஜேடி) காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்து லோக்சபா தேர்தலை சந்தித்தது. ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவ் சிறைவாசம் அனுபவித்து வருவதால், அவரது மகனும், அம்மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் தலைமையில் இந்த கூட்டணி செயல்பட்டது.

எதிர்தரப்பில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பாஜக மற்றும் லோக் ஜனசக்தி கட்சிகள் இணைந்து நின்றன. நேற்றைய தேர்தல் முடிவுகள் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சிக்கு பெரிய அடியை கொடுத்துள்ளது.
அங்கு மொத்தமுள்ள 40 லோக்சபா தொகுதிகளில் 39 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம்- பாஜக கூட்டணி கைப்பற்றியது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையில் இருந்த காங்கிரஸ் மட்டுமே ஒரே ஒரு இடத்தை வெற்றி பெற்றது. கூட்டணிக்கு தலைமை வகித்த ஆர்ஜேடிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை.
அக்கட்சி துவங்கியது முதல் ஆர்ஜேடி இவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்தது இல்லை. போட்டியிட்ட 20 தொகுதிகளில் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை. 1997ம் ஆண்டு ஜனதா தளத்திலிருந்து பிரிந்து லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்டோர் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியை உருவாக்கினர். கட்சி துவங்கப்பட்ட மறு வருடமே பீகார் லோக்சபா தேர்தலில் 17 இடங்களை கைப்பற்றியது.
கடந்த 2008ம் ஆண்டு தேசிய கட்சி அந்தஸ்தையும் பெற்றது. ஆனால், இந்த தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதா தள கூட்டணிக்கு ஈடுகொடுக்க முடியாமல் மண்ணை கவ்வி இருக்கிறது ராஷ்ட்ரிய ஜனதா தளம். அம்மாநிலத்தின் பலம் வாயந்த முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் ஆர்ஜேடி கடந்த தேர்தலிலாவது 3 தொகுதிகளை பெற்றது. இந்தமுறை பூஜ்ஜியத்துடன் மண்ணை கவ்வி இருக்கிறது.
இந்த தேர்தலில் பாஜக 17 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களையும், ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட்ட 6 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளன. கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலிலும் பாஜக பீகாரில் 22 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications