வயிற்றில் இருந்து வெளியே வந்த குடல்.. ரயில்வே போலீஸ் தடியடியால் துடிதுடித்த வாலிபர்! நெஞ்சே பதறுதே
பாட்னா: பீகார் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறின்போது ரயில்வே போலீஸ் தாக்கியதில் பயணி ஒருவரின் குடல் வெளியே வரும்வரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது.
பீகார் மாநிலம் சித்மாரி மாவட்டம் ஜனக்பூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக நேற்று முன்தினம் இரவு மும்பை நோக்கி கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனால் ரயிலில் இடம் பிடிப்பது தொடர்பாக ஜனக்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. ரயிலின் ஜன்னல் வழியாக பலரும் இருக்கை பிடித்தனர். இன்னும் சிலர் ஜன்னல் போல் இருக்கும் எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக ரயிலுக்குள் ஏறினர்.
இதனால் பயணிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வே போலீசார் அங்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் பயணிகள் சீட் பிடிப்பதில் மும்முரமாக இருந்தனர். இதனால் ரயில்வே போலீசார் மற்றும் பயணிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அப்போது முகமது ஃபுக்ரான் என்பவரை பிடித்து ரயில்வே போலீசார் தாக்கினர். போலீசார் விடாமல் கொடூரமாக தாக்கியதில் அவரது வயிற்றில் இருந்து குடல் வெளியே வந்தது. சில நாட்களுக்கு முன்பு தான் அவர் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் போலீசாரின் தாக்குதலின்போது குடல் வெளியே வந்தது. இதனால் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து உடனடியாக முகமது ஃபுக்ரான் மீட்கப்பட்டு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக முசாபர்பூரின் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தான் முகமது ஃபுக்ரானின் வயிற்றில் இருந்து குடல் வெளியே வரும்வரை தாக்கிய ரயில்வே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய ரயில்வே போலீஸ் பிரிவின் உயரதிகாரிகள் ரயில்வே போலீஸ்காரர்கள் ப்ராணி தயானந்த் பாஸ்வான் மற்றும் கோரேலால் சவுகி ஆகியோரை சஸ்பெண்ட் செய்தனர்.












Click it and Unblock the Notifications