பீகாரில் 30 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. முக்கிய துறைகளை அள்ளிய தேஜஸ்வியின் ஆர்ஜேடி!
பாட்னா: பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் இறுதி செய்யப்பட்டு 30 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் தேஜஸ்வி யாதவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பிகார் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், பீகாரில் அமைந்துள்ள மகா கூட்டணி அரசின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றது. அமைச்சரவையில் தேஜஸ்வி யாதவ் உட்பட 30 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். கூட்டணியிலேயே அதிக தொகுதிகளை பெற்றிருக்கும் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 16 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேஜஸ்வி யாதவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரத் துறை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, நிதித்துறை, வணிகவரி, சாலைக் கட்டுமானம், பேரிடர் மேலாண்மை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட உள்ளன. அக்கட்சியில் எதிர்பார்த்தது போலவே யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகப்படியாக 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய ஜனதா தளத்துக்கு 11 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு ஒரு அமைச்சர் பதவியும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன.
முதல்வர் நிதிஷ் குமார் ஏற்கனவே தன் வசம் இருந்த உள்துறையை தக்க வைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, கல்வி, கட்டட கட்டுமானம், சிறுபான்மை நலன், சமூக நலத்துறை, நீர்வளங்கள் உள்ளிட்ட துறைகள் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications