முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதிகளில்.. வாக்குகளை பிரிக்கும் ஓவைசி? வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!
பாட்னா: பீகாரில் சீமாஞ்சல் என்று ஒரு பகுதி இருக்கிறது. இது வங்க தேச எல்லையில் இருக்கிறது. இங்கு முஸ்லிம்கள் அதிகம் வசிக்கின்றனர். இந்த பகுதி மொத்தம் 24 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது. பீகாரில் ஆட்சியை பிடிக்க வேண்டும் எனில் இங்குள்ள முஸ்லிம் வாக்களர்களின் ஆதரவு வேண்டும். ஆளும் ஐக்கிய ஜனதா தளம், ஆட்சியை பிடிக்க துடிக்கும் ஆர்ஜேடி கூட்டணி இந்த பகுதி வாக்காளர்களை கவர முயன்று வரும் நிலையில், ஓவைசி சீமாஞ்சல் பகுதியை குறிவைத்து வாக்காளர் பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.
அசதுதீன் ஓவைசி தலைமையிலான AIMIM கட்சி, பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று வெளியிட்டது. இப்பட்டியலில் 25 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர், அவர்களில் இரண்டு பேர் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள். வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்து தனது x தளத்தில், "வரவிருக்கும் பீகார் தேர்தலுக்கான AIMIM வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த வேட்பாளர்கள், கட்சியின் தேசிய தலைமையுடன் கலந்தாலோசித்து, பீகார் மாநிலப் பிரிவால் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இன்ஷா அல்லாஹ், பீகாரின் மிகவும் பின்தங்கிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு நாங்கள் ஒரு நீதியான குரலாக இருப்போம்" என கட்சி தலைமை தெரிவித்திருக்கிறது.

கட்சியின் ஒரே எம்எல்ஏவும், மாநிலத் தலைவருமான அக்தருல் ஆலம், அமூர் தொகுதியிலிருந்து மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் பீகார் அமைச்சரும், பெகுசராய் முன்னாள் எம்பியுமான முனாசிர் ஹசன் முங்கர் தொகுதியிலும், நான்கு முறை எம்எல்ஏவாக இருந்த தௌசிஃப் ஆலம் பகதூர்ஹஞ்ச் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த மூன்று தொகுதிகளில் அமூர் மற்றும் பகதூர்ஹஞ்ச் ஆகிய தொகுதிகள் சீமாஞ்சல் பகுதிக்குள் வருகிறது.
இந்து சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களில், முன்னாள் எம்பி சீதாராம் சிங்கின் மகனான ராணா ரஞ்சித் சிங் தாகா தொகுதியிலும், மனோஜ் குமார் தாஸ் சிகந்திரா தொகுதியிலும் களமிறங்குகின்றனர். இந்த தொகுதிகள் சீமாஞ்சலில் வரவில்லை. கடந்த 2020 தேர்தலில் AIMIM கட்சி, ராஷ்டிரிய லோக் சமதா கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது. இந்த ராஷ்டிரிய லோக் சமதா கட்சி சார்பில் கடந்த தேர்தலில் தாகா மற்றும் சிகந்திரா தொகுதிகளில் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். ஆனால் தாகாவில் பாஜகவும், சிகந்திராவில் NDA கூட்டணிக் கட்சியான ஜிதன் ராம் மன்ஜியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவும் வெற்றி பெற்றன.
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாளாகும். கிசன்கஞ்ச், பூர்ணியா, அராலியா, கட்டிஹார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சீமாஞ்சல் பிராந்தியத்தைத் தாண்டி, தர்பங்கா, சீவான், முங்கர், பாகல்பூர் போன்ற பகுதிகளிலும் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இருப்பினும் சீமாஞ்சல் பகுதியில் என்டிஏ கூட்டணி கைப்பற்றுமா? லாலு பிரசாந்த் கட்சி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி கைப்பற்றுமா? என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஓவைசி சீமாஞ்சல் பகுதியை மையப்படுத்தி வேட்பாளர்களை அறிவித்திருப்பதால், இவரது கட்சி வாக்குகளை பிரிக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications