5 நிமிஷ கேப்பில்.. பீகாரில் மூதாட்டிக்கு ஒரே நாளில் கோவிஷீல்டு, கோவாக்சின் போட்ட செவிலியர்கள்!
பாட்னா: பீகாரில் செவிலியர்களின் கவனக்குறைவால் கிராமப்புற பெண் ஒருவருக்கு 5 நிமிட இடைவெளியில் இரு வேறு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு வேறு தடுப்பூசி செலுத்தப்பட்ட 63 வயது மூதாட்டி மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். பாட்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவீந்திரா மாஹாட்டோவின் மனைவி சுனில் தேவி.
இவர் கடந்த புதன்கிழமை புன்புன் ஊராட்சியில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்றார். ஆதார் அட்டை மூலம் அங்கு தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றன.

இரு கவுன்ட்டர்கள்
அந்த அரசு பள்ளியில் இரு வேறு வயது பிரிவினருக்காக ஒரே அறையில் இரு கவுன்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டன. ஒன்று 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், இரண்டாவது 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். இந்த நிலையில் சுனில் தேவி 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான வரிசையில் நின்றார்.

இன்னொரு வரிசை
அவருக்கு கோவாக்சின் ஊசி போடப்பட்டது. பின்னர் அவருக்கு பின்விளைவுகள் ஏற்படுகின்றனவா என பார்க்க சற்று காத்திருக்குமாறு மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் இரு வேறு கவுன்ட்டர்கள் இருந்ததால் இன்னொரு ஊசியையும் போட வேண்டியது கட்டாயம் என சுனில் தேவி நினைத்துக் கொண்டு அந்த வரிசையிலும் நின்றார்.

கோவிஷீல்டு தடுப்பூசி
அங்கு அவருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. மருத்துவர்களும் 63 வயதுடைய நீங்கள் ஏன் இந்த வரிசையில் வந்தீர்கள் என கேட்கவில்லை, இவரும் தான் இன்னொரு வரிசையில் நின்று தடுப்பூசி போட்டுக் கொண்டதை கூறவும் இல்லை. இதையடுத்து இதுகுறித்து தகவலறிந்த கிராமத்தினர் தடுப்பூசி மையத்திற்கு வந்து போராட்டம் நடத்தினர்.

சோதனை
இதுகுறித்து தகவலறிந்த சுகாதாரத் துறை அதிகாரி சஞ்சய் குமார் அந்த பெண்ணின் உடலை சோதனையிட்டார். அவர் நன்றாக இருக்கிறார், எனினும் அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். அலட்சியபோக்கை கையாண்ட இரு செவிலியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications