ஆபீசருங்களா.. காலில் விழுகிறேன்.. மேடையில் சாலை பணி அதிகாரிகளை அதிரவிட்ட 'அந்நியன்’ நிதிஷ்குமார்!
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மேடைகளில் கோபப்படுவதும் வேறு மாதிரியான முகங்களை காட்டுவதும் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் அவ்வப்போது பகிரப்பட்டு வருகிறது. அதேபோல் சாலை மேம்பாட்டு பணிகளை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சியில் 'அம்பியாக' பேசிக் கொண்டிருந்த நிதிஷ்குமார் திடீரென 'அந்நியனை' போல "அதிகாரிகளே.. உங்கள் கால்களில் கூட விழுகிறேன்" என பேசியபடியே மேடையில் நின்ற ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் காலில் விழப் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பீகார் மாநிலத்தில் ஜேபி கங்கா சாலை திட்டம் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இம்மாநிலப் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கக் கூடிய திட்டமாகவும் கருதப்படுகிறது.

ஜேபி கங்கா சாலை திட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதி பணிகள் முடிவடைந்த நிலையில் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ரவிசங்கர் பிரசாத் எம்பி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த முதல்வர் நிதிஷ்குமார், மக்களின் நலனுக்காகவும் மாநிலத்தின் நலனுக்காகவும் சாலைப் பணிகளை அதிகாரிகள் விரைவாக முடிக்க வேண்டும். இதற்காக நீங்கள் விரும்பினால் உங்கள் கால்களில் கூட விழுவதற்கு தயாராக இருக்கிறேன் என்றார்.
காலில் விழக் கூட தயாராக இருக்கிறேன் என்று பேசியபடியே திடீரென மேடையில் நின்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நெருங்கி நிதிஷ்குமார் அவர் காலில் விழ முயற்சித்தார். ஆனால் அந்த ஐஏஎஸ் அதிகாரியோ உஷாராகி பின்வாங்கியபடியே, இப்படி செய்யாதீர்கள் என அவர் கெஞ்ச தொடங்கிவிட்டார். இதனால் இந்த விழா நிகழ்ச்சியே அதிர்ச்சியில் உறைந்தது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அரசு விழா மேடையில் 'அம்பியாக' பேசிக் கொண்டிருந்த நிதிஷ்குமார் 'அந்நியன்' போல நடந்து கொள்கிறாரே என்பதும் நெட்டிசன்களின் கமெண்ட்தான்.
பீகார் மாநிலத்தில் எம்.எல்.ஏ. பதவி வகிக்காமலேயே முதல்வராக நீடிப்பவர் நிதிஷ்குமார்தான். அதேபோல எந்த கட்சியுடனும் எப்போது வேண்டுமானாலும் கூட்டணி சேர தயங்காதவர் என்ற பெயரை இந்திய அரசியலில் 'வலிமையாக' பெற்றிருப்பவரும் நிதிஷ்குமார்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications