பீகார் சட்டசபைத் தேர்தலில் கோடீஸ்வரர்கள் மட்டுமல்ல குற்றவாளிகளும் இருக்காங்க பாஸ்
பீகார் சட்டசபை தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் 94 தொகுதிகளில் போட்டியிடும் கோடீஸ்வர குற்றவாளி வேட்பாளர்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
பாட்னா: அரசியலில் களமிறங்க கோடீஸ்வரர்களாக இருக்க வேண்டும். அதோடு ஆள் அம்பு சேனை பலத்தோடு அடியாள்கள் அதிகம் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். பீகாரில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் கட்சி வித்தியாசம் இல்லாமல் கோடீஸ்வரர்களும் குற்றவாளிகளும் களமிறங்குகின்றனர்.
பீகார் சட்டமன்றத் தேர்தல் 2020 இன் இறுதி கட்டத்திற்கான பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் முடிவடைந்தது. பிரச்சாரத்தில் அனல் பறந்தது குற்றச்சாட்டுகளும் மாறி மாறி முன்வைக்கப்பட்டன. இன்றைய தினம் காலை 7 மணியில் இருந்து 17 மாவட்டங்களில் 94 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இரண்டாம் கட்டமாக நடைபெறும் இந்த தேர்தலில் நிதீஷ்குமார் அமைச்சரவையில் ஏழு அமைச்சர்களின் தலைவிதியை தீர்மானிக்கப்போகிறது. ஆர்ஜேடி முதல்வர் வேட்பாளர் தேஜஷ்வி யாதவ், ஆர்ஜேடி தலைவரான லாலு பிரசாத் யாதவின் மகன்களுக்கு இது ஒரு ஆசிட் டெஸ்ட் ஆக அமைந்துள்ளது.
இந்த சட்டசபைத் தேர்தலில் ஏராளமான கிரிமினல் குற்றவாளிகளும், கோடீஸ்வரர்களும் போட்டியிடுகிறார்கள். இன்றைய தினம் நடைபெறும் தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களில் சுமார் 34% பேர் தங்களுக்கு எதிராக கிரிமினல் வழக்குகளை அறிவித்துள்ளனர்.
ஊழலற்ற நேர்மையான ஆட்சியைத் தருவோம் என்று சூளுரைக்கும் அரசியல்வாதிகள் தங்களின் கட்சியில் கோடீஸ்வர குற்றவாளிகள் போட்டியிடவே வாய்ப்பு தருகின்றனர். மூன்று வேட்பாளர்களில் ஒருவர் குற்றவழக்குகளில் தொடர்புடையவராக இருக்கிறார்.
ஐக்கிய ஜனதா தளம், ஆர்ஜேடி, பாஜக, இந்திய தேசிய காங்கிரஸ், எல்ஜேபி என அனைத்து கட்சிகளிலும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இவர்கள் வெற்றி பெற்று சட்டசபைக்கு செல்லும் போது கோடீஸ்வர குற்றவாளிகள் கொண்ட சட்டசபையாக பீகார் மாநில சட்டசபை காட்சியளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.












Click it and Unblock the Notifications