Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒருமுறை கூட எம்எல்ஏ கிடையாது.. ஆனால் 9 முறை முதல்வர்.. இப்போதும் போட்டியிடாமலே CM ஆக தயாரான நிதிஷ் குமார்.. எப்படி?

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால் மீண்டும் நிதிஷ் குமார் முதல்வராகலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கடந்த 9 முறை அவர் முதல்வராக பதவி வகித்த காலத்தில் ஒரு முறை கூட சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனது இல்லை. தற்போதைய சட்டசபை தேர்தலிலும் அவர் களமிறங்காத நிலையில் முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ளார். எம்எல்ஏவாக இல்லாமலே பீகாரில் முதல்வராவது எப்படி சாத்தியமாகிறது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

bihar-election-result-nitish-kumar-likely-to-cm-of-bihar-how-he-who-has-never-been-an-mla-for-35-y

பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது. பாஜக கூட்டணியில் பாஜக 89 தொகுதி, நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மாறாக ‛மகாகத்பந்தன்' கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த 2 கூட்டணியை தவிர்த்து தனியாக போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது.

பீகாரை எடுத்து கொண்டால் அது நிதிஷ் குமாரின் கோட்டையாக உள்ளது. பீகாரில் எந்த கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றால் அங்கு முதல்வர் நிதிஷ் குமார் தான். இது தான் கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கடந்த 2005ம் ஆண்டு முதல் இன்று வரை பீகார் முதல்வராக நிதிஷ் குமார் தொடர்ந்து வருகிறார். இந்த காலக்கட்டத்தில் 2014 மே மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் மட்டும் ஜிதன் ராம் மஞ்சி முதல்வராக இருந்தார். தற்போது அவரும் பாஜக - நிதிஷ் குமார் கூட்டணியில் தான் உள்ளார். மீதமுள்ள காலம் முழுவதும் நிதிஷ் குமார் தான் முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார்.

மேலும் கடந்த 35 ஆண்டுகளாக போட்டியிடாமலே 9வது முறை அவர் முதல்வராக செயல்பட்டுள்ளார். இந்த முறையும் சட்டசபை தேர்தலில் நிதிஷ் குமார் களமிறங்கவில்லை. ஆனால் தற்போது பாஜக கூட்டணி 200க்கும் அதிகமான இடங்களில் முன்னிலையில் இருப்பதால் நிதிஷ் குமார் முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ளது. எம்எல்ஏவே ஆகாமல் நிதிஷ் குமார் 9 முறை முதல்வராகி 10வது முறையாக அந்த பதவியை எட்டிப்பிடிக்க முயற்சிப்பதுஎப்படி? என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அதாவது தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் சட்டசபை மட்டும் தான் உள்ளது. ஆனால் கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் உள்பட மேலும் சில மாநிலங்களில் சட்டசபை மட்டுமின்றி சட்ட மேலவையும் உள்ளது. இந்த சட்ட மேலவையின் உறுப்பினர்களை எம்எல்சி என அழைப்பார்கள். இந்த சட்ட மேலவை என்பது நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா போன்றது. நாடாளுமன்றத்தில் மக்களவை (லோக்சபா) எம்பிக்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்கள். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆனால் நாடாளுமன்ற மாநிலங்களை (ராஜ்யசபா) எம்பிக்கள் என்பவர்கள். ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்கள் ஓட்டளித்து தேர்வு செய்யப்படுவார்கள். இப்படி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாலும் கூட அவர்களால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பலர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் தான்.

அதேபோல் தான் பீகாரில் சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் நிதிஷ் குமார் சட்ட மேலவை உறுப்பினராக இருந்து கொண்டு முதல்வர் பதவியை அனுபவித்து வருகிறார். சட்ட மேலவை உறுப்பினர் அந்த மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த சட்ட மேலவை உறுப்பினராக இருந்து கொண்டு தான் நிதிஷ் குமார் 9வது முறை முதல்வராகி உள்ளார். இதனால் தான் அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதே கிடையாது. இந்த முறையும் களமிறங்கவில்லை.

இருப்பினும் நிதிஷ் குமார் முதல்வராவதற்கு முன்பு சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அப்போது அவர் முதல்வராகவில்லை. முதல் முதலில் அவர் 1977 ம் ஆண்டில் ஹரனாட் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு 1985ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு 1995ல் எம்பியாக இருந்து கொண்டு மீண்டும் சட்டசபை தேர்தலில் ஹர்னாட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனாலும் அவர் எம்எல்ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு எம்பியாக தொடர்ந்தார்.

அதன்பிறகு அவர் சட்டசபை தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தான் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அவர் 6 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் மத்திய ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார். அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிடுவதை தவிர்த்தார். கடந்த 2004ல் பீகாரில் நாளந்தா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். ஆனால் அடுத்த ஆண்டு 2005ல் அவரது கட்சி பீகாரில் அமோக வெற்றி பெற்றதால் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பீகாரில் முதல்வரானார். எம்எல்சியாக அந்த பதவியை அனுபவித்தார்.

கடந்த 35 ஆண்டுகளாக அவர் எம்எல்ஏவாக இல்லாமல் இருப்பது ஒரு பக்கம், கடந்த 20 ஆண்டுகளாக சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் நிதிஷ் குமார் உள்ளார். ஆனால் எம்எல்சி பதவியை வைத்து கடந்த 2005ம் ஆண்டு முதல் பீகார் முதல்வராக தொடர்ந்து இருக்கிறார். 19 ஆண்டுகளுக்கு மேலாக எம்எல்சி பதவியை வைத்து முதல்வராகி உள்ளார். நிதிஷ் குமாரை எடுத்து கொண்டால் முதல்வர் பதவிக்காக எந்த நிலைக்கும் செல்வார். இதற்கு அவர் அடிக்கடி கூட்டணியை மாற்றி அமைப்பார். எந்த கூட்டணி சென்றாலும் அங்கே முதல்வராக இருப்பார்.

உதாரணமாக கூற வேண்டும் என்றால் பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் எதிர்கொண்டது. இந்த தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி வெற்றி பெற்றது. 243 சட்டசபை தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நிலையில் பாஜக 74 தொகுதிகளில், ஜேடியூ 43 தொகுதிகளிலும் வென்றது.

இதையடுத்து நிதிஷ் குமார் முதல்வரானார். இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி 72 தொகுதிகளிலும் காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் வென்று இருந்தது. லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சி தலைரவாக செயல்பட்டார். இதையடுத்து 2 ஆண்டுகளில் பாஜகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் நிதிஷ் குமார் 2022ல் வெளியேறினார்.

அதன்பிறகு பீகாரில் ஆட்சி மாற்றம் நடந்தது. நிதிஷ் குமாரின் ஜேடியூ, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. இந்த கூட்டணியிலும் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வாக இருந்தார். அதன்பிறகு இந்த கூட்டணியும் கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக முறிந்தது.

தேசிய அளவிலான ‛இந்தியா' கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் நிதிஷ் குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறினார். மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்து முதல்வர் பதவியை எட்டிப்பிடித்தார். இப்போதும் பாஜக கூட்டணியில் அவர் சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ளார். இந்த கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வர் பதவி மீது கண்வைத்துள்ளார். ஒருவேளை பாஜக முதல்வர் பதவியை கொடுக்காவிட்டால் நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணி மாறலாம் என்கின்றனர். இதனால் பீகார் அரசியல் விவகாரம் இன்னும் சில நாட்கள் இந்தியாவின் ‛ஹாட் டாபிக்காக' இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+