ட்விஸ்ட்.. இதோ இந்த 5 காரணங்கள்தான்.. பீகாரை தக்க வைத்தது பாஜக.. கடைசி நிமிடத்தில் மாறிய கணக்கு!
பீகாரில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றே தெரிகிறது
பாட்னா: பீகார் மாநிலத்தில் பாஜக மீண்டும் அரியணை ஏற உள்ளது.. அங்கு தன் பலத்தை மறுபடியும் போராடி நிரூபித்துள்ளது.. நிதிஷ்குமார் ஆட்சி இத்துடன் வீட்டுக்கு போக வேண்டியதுதான் என்று கணிப்புகள் சொல்லப்பட்ட நிலையில், அத்தனையும் தவிடுபொடியாகி விட்டது.
பீகார் மாநிலத்தை பொறுத்தவரை லாலு 15 வருஷம், நிதிஷ்குமார் 15 வருஷம் ஆண்டு முடித்தனர்.. இதில் லாலு ஜெயிலுக்கு சென்றபிறகு, அவர் கட்சியை வழிநடுத்த வலுவாக யாரும் இல்லாத சமயத்தில்தான் தேஜஸ்வி களமிறங்கினார்.
லாலுவின் மகன்கள் 2 பேருமே வயதில் சிறியவர்கள்.. அரசியல் அனுபவம் குறைவானவர்கள்.. ராட்சத பாஜகவை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பத்தில் தடுமாறிவர்கள்தான். ஆனால் விறுவிறுவென தனித்திறமைகளால் முன்னேறினர்.. பாஜகவுக்கே ஒரு கட்டத்தில் டஃப் தர ஆரம்பித்துவிட்டனர்.
இப்படி இருந்தும் பாஜக எதிர்தரப்புக்கு நேற்று காலை முதல் டஃப் கொடுத்தபடியே இருந்துவிட்டு, கடைசியில் வெற்றி வாகையும் சூடிவிட்டது.. இதற்கு என்ன காரணம்? முக்கியமாக 5 காரணங்களை சொல்லலாம்.
பீகார் தேர்தல் முடிவுகள் எதிரொலி... இன்னும் சீட்டை குறைச்சுடுமோ திமுக? பீதியில் காங்கிரஸ்
முதல் காரணம்
முதலாவதாக, வேட்பாளர் தேஜஸ்வியை பாஜக ஆரம்பத்தில் இருந்தே அலட்சியமாக நினைத்தது.. அவரை ஒரு வேட்பாளராகவே கருதவில்லை.. கிட்டத்தட்ட டிரம்ப் போலதான்.. பிடனை அவர் ஒரு வேட்பாளராககூட கடைசிவரை மதிக்கவே இல்லை.. ஒருவேளை பிடன் ஜெயித்துவிட்டால், நாட்டை விட்டே வெளியேற தயார் என்று சொல்லும் அளவுக்கு தன் மீது அபாரமான நம்பிக்கையை வைத்திருந்தார் டிரம்ப்.. அப்படித்தான் இந்த முறை பாஜக நடந்து கொண்டது.. நம்மைவிட்டால் இந்த பீகார் மக்களுக்கு யாருமில்லை என்று பாஜக கணக்கு போட்டது.
இரண்டாவது காரணம்
இரண்டாவதாக, அகில இந்திய காங்கிரஸை மனதில் வைத்துகொண்டு, இந்த மாநில காங்கிரஸையும் மலிவாக எடைபோட்டது பாஜக.. தேய்ந்து போய்வரும் காங்கிரசும், மங்கி வரும் கம்யூனிஸ்ட்டும் இனி எழ வாய்ப்பே இல்லை என்று திடமாக நம்பியது.. அதையே தங்கள் பிரச்சாரங்களிலும் பயன்படுத்தி கொண்டு வந்தது.. ஒருவேளை காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றுவிட்டால், அதற்கு மாற்று என்ன என்பதை பாஜக பெயரளவுக்குகூட சிந்திக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
மூன்றாவது காரணம்
மூன்றாவதாக, 15 வருட ஆட்சியில் நிதிஷ் மீது ஒரு சலிப்பு வந்துவிட்டது அந்த மாநில மக்களுக்கு.. என்னதான் சில நல்ல விஷயங்களை நிதிஷ் அந்த மாநிலத்தில் செய்திருந்தாலும், ஒரு வெறுமை மாநிலத்தை கவ்விக் கொண்டது.. இதை உணர்ந்துதான் பாஜக சரிக்கு சமமாக தொகுதிகளை பிரித்து கொண்டதோ என்னவோ தெரியவில்லை.. நிதிஷ்குமாருடனேயே ஏகப்பட்ட பிரச்சனைகள் கூட்டணிக்குள் இருந்து வந்தாலும், கண்டிப்பாக பாஜக தலைமையில் ஆட்சி அமையவே காய்களை இனி நகர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.
நான்காவது காரணம்
நான்காவதாக, பிரச்சாரங்களை சரியாக பயன்படுத்தி கொண்டது பாஜக.. சீன எல்லை பிரச்சனையை பிரதமரே நேரடியாக வந்து பீகாரில் எடுத்துரைத்தார்... காஷ்மீர் விவகாரத்தை பாஜக கையாண்டதையும் விவரித்து பேசினார்.. ஆனால், 6 மாதமாக வாழ்வாதாரத்தை மொத்தமாக தொலைத்த மக்கள், எப்படியும் இந்த பிரச்சாரத்தை ரசிக்க மாட்டார்கள் என்றுதான் கணக்கு போடப்பட்டது.
தடுப்பூசி
"நாங்கள் ரேஷன் பொருட்கள் தருகிறோம், 100 நாள் வேலைக்கு ஏற்பாடு செய்கிறோம்" என்றும், கொரோனாவுக்கு இலவச தடுப்பூசி தருகிறோம் என்றும் பாஜக சொன்னபோதுகூட, மக்கள் முன்பு அது எடுபடாது என்றே கணக்கு போடப்பட்டது.. மாறாக, 10 லட்சம் பேருக்கு அரசு வேலை வாய்ப்பு என்று தேஜஸ்வி சொன்னதுதான் அவர்கள் மனசில் பதியும் என்றும் நம்பப்பட்டது.. அதுவும் தற்போது பொய்யாகி விட்டது.
ஐந்தாவது காரணம்
ஐந்தாவதாக, பாஜகவின் தீவிர இந்துத்துவம் மிக முக்கிய பங்கை வகித்துள்ளது.. மாநிலத்தில் என்ன பிரச்சனை நடந்து கொண்டிருக்கிறது, எது பிரதானம் என்று கூட தெரியாமல், எப்ப பார்த்தாலும் வகுப்புவாதத்தை திணிப்பது என்பது சாத்தியமில்லை என்று அரசியல் நோக்கர்கள் எதிர்த்து கொண்டிருந்தாலும், பாஜக தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது.. 370 சட்டப்பிரிவாகட்டும், ராமர் கோயில் விவகாரமாகட்டும், அத்தனை இந்துத்துவா விவகாரங்களையும் அரசியலுக்கே சாதகமாக திருப்பி போட்டு, அதன்மூலம் இந்துக்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே பாஜக முயன்றதும் வீண்போகவில்லை.
ஆச்சரியம்
வெள்ள பிரச்சனை, கொரோனா பிரச்சனை, வாழ்வாதார பிரச்சனை, மதரீதியான பிரச்சனைகள் என்று பீகார் மாநில மக்கள் புலம்பி கொண்டே இருந்தாலும்.. எல்லாவற்றையும் சுருட்டி கீழே போட்டுவிட்டு.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளையும் நொறுக்கி தள்ளிவிட்டுவிட்டு.. பாஜக வெற்றி வாகையை சூடியது ஆச்சரியமாகவே பார்க்கப்படுகிறது.