பெருங்கொடுமை! நீட் வினாத் தாள் லீக் கும்பலுக்கு தலைவரே 'பீகார் அமைச்சர்'தானாம்- பகீர் வாக்குமூலம்!
பாட்னா: நாட்டையே அதிரவைத்துக் கொண்டிருக்கும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே விற்பனை செய்யப்பட்ட கும்பலின் தலைவராக பீகார் மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் அமைச்சர் ஒருவர்தான் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் பகீர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நீட் நுழைவுத் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

பீகார் மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வு நடப்பதற்கு முன்னரே ரூ.30 லட்சத்துக்கு ஒரு வினாத் தாள் விற்பனை செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. அதுவும் மாணவர்கள் தரும் தொகையைப் பொறுத்து நீட் வினாத்தாள் ஒரு நாள் முன்னதாக, தேர்வுக்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக என விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை விவகாரத்தில் பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி பலரை கைது செய்துள்ளனர். இதில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 மாணவர்களை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி இருக்கின்றனர் போலீசார்.
நீட் வினாத்தாள் விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபராக கருதப்படும் சிக்கந்தர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு நீட் வினாத் தாள் விற்பனை செய்வதற்காக தமக்கு தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையுமே செய்து கொடுத்தது பீகார் மாநில அமைச்சர் ஒருவர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளாராம் சிக்கந்தர். நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவராக பீகாரில் ஆளும் பாஜக-ஜேடியூ அரசின் அமைச்சர் ஒருவர்தான் செயல்பட்டிருப்பதாக சிக்கிய சிக்கந்தர் கொடுத்த வாக்குமூலம் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் கடுமை காட்டி வருகிறது. இந்த முறைகேடுகளைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டைப் போலவே குரல் கொடுத்து வருகின்றன. பீகார், மேற்கு வங்கம், டெல்லி என பல மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டங்களில் குதித்திருக்கின்றனர். இந்த நிலையில் பீகார் மாநில பாஜக-ஜேடியூ அரசின் அமைச்சர்தான் நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவர் என்பது பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications