31 பேருடன் பீகார் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்பு.. லாலு கட்சிக்கு அதிக இடங்களா?
பாட்னா: பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் தலைமையில் புதிதாக அமைந்துள்ள மகா கூட்டணி அரசின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்கவுள்ளது.
மொத்தம் 31 பேர் புதிய அமைச்சரவையில் இடம்பெறவுள்ளனர். இதில் அதிக இடங்களும், முக்கியத்துவம் வாய்ந்த இலாக்காக்களும் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ் குமார், தனது முதல்வர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்தார். பின்னர் தனது அரசியல் எதிரியான லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பிகார் முதல்வராக நிதிஷ் குமார் அண்மையில் பதவியேற்றார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றுள்ளார்.நிதிஷ் குமாரின் இந்த நடவடிக்கையால் பாஜக கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிகாரில் அமைந்துள்ள மகா கூட்டணி அரசின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்கவுள்ளது. பிகார் அமைச்சரவையில் முதல்வருடன் சேர்ந்து 36 அமைச்சர்கள் இடம்பெற முடியும். ஆனால், தற்போது 31 அமைச்சர்களை மட்டுமே முதல்வர் நிதிஷ் குமாரும், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இந்த அமைச்சரவயில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இடம்பெறவுள்ளனர். எனினும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர்களுக்கே புதிய அமைச்சரவையில் அதிக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், சுரேந்திர யாதவ், லலித் யாதவ், குமார் சர்வீத், பாரத் மண்டல், அனிதா தேவி உள்ளிட்ட 15 பேர் பிகார் அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் முக்கியத்துவம் வாய்ந்த நிதித்துறை, வணிக வவரி, சுகாதாரம், சாலைக் கட்டுமானத் துறை ஆகியவை ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்தை பொறுத்தவரை, இதற்கு முன்பு அமைச்சர்களாக இருந்தவர்களில் இருவரை தவிர மற்ற அனைவரும் இடம்பெறுவார்கள் என தகவலறிந்த வட்டாரங்கள் இருக்கின்றன. அக்கட்சியில் இருந்து மொத்தம் 12 பேர் அமைச்சர்களாக இடம்பெறவுள்ளனர்.
காங்கிரஸுக்கு புதிய அமைச்சரவையில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பிகார் ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் இன்று பிற்பகல் பதவியேற்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications