பீகார் சட்டசபையில் ஆக.24-ல் முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
பாட்னா: பீகார் சட்டசபையில் ஆகஸ்ட் 24-ந் தேதி முதல்வர் நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட ஜேடியூ, ஆர்ஜேடி, காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்துள்ளது. பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் பதவியேற்றார். துணை முதல்வராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றுள்ளார்.
முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை ஆகஸ்ட் 15-ந் தேதி பதவியேற்க உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 24-ந் தேதி நிதிஷ்குமார் அரசு மீது சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பீகாரில் தற்போதைய நிலையில் 7 அரசியல் கட்சிகள் ஆதரவும் அதாவது 164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தமக்கு இருக்கிறது என்கிறார் நிதிஷ்குமார். பீகார் சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 122 எம்.எல்.ஏக்கள். இதனால் நிதிஷ்குமார் அரசு பெரும்பான்மையை எளிதாக நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில் நிதிஷ்குமாரின் புதிய கூட்டணி ஆட்சிக்கு பாஜக குடைச்சல் கொடுக்கக் கூடிய வாய்ப்புகளையும் நிராகரிப்பதற்கும் இல்லை. பீகார் சட்டசபையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட அமளி, வன்முறையில் ஈடுபட்ட ஆர்ஜேடி- காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 32 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது. அப்படி ஆர்ஜேடி-காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 32 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார் நிதிஷ்குமார் அரசு பெரும்பான்மையை நிரூபிப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் கூறப்படுகிறது.
பீகார் சட்டசபை ஆகஸ்ட் 24-ந் தேதி கூடும் நிலையில் முதல் கட்டமாக பாஜகவை சேர்ந்த சபாநாயகர் விஜயகுமார் மீது ஆளும் கட்சி எம்.எல்.ஏக்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளனர். இத்தீர்மானத்தை நிறைவேற்றுவதற்குள் 32 எம்.எல்.ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வார் எனவும் கூறப்படுகிறது. இதனால் பீகார் அரசியலில் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications