பீகார் தேர்தல்: 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்தது.. மாலை 5 மணியுடன் நிறைவு
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவையில், 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 57.33 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
முதல்கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், சுயேட்சை வேட்பாளரான தேஜஸ்வியின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், பாஜகவின் சம்ராட் சௌத்ரி உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் முதன் முறையாக தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி களமிறங்குகிறது.
முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77 சதவீத வாக்குகள் பதிவாகியது. இந்த நிலையில் மாலை 5 மணியுடன் பீகாரில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

முக்கிய தொகுதிகள் எது?
பாட்னா, தர்பங்கா, மாதேபுரா, சஹர்சா, முசாபர்பூர், கோபால் கஞ்ச், சீவான், சாரன், வைஷாலி, சமஸ்திபூர், பெகுசாராய், லகிசாராய், முங்கர், ஷேக்புரா, நாலந்தா, பக்சார் மற்றும் போஜ்பூர் என மொத்தம் 18 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ரகோபூர், பெகுசாராய், ககாரியா, மகுவா, உஜைர்பூர், பாட்னா சாகிப், நாலந்தா மற்றும் பக்சார் போன்ற தொகுதிகள் இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன.
பாஜகவின் மூத்த தலைவர் சாம்ராட் சவுத்ரி தாராப்பூர் தொகுதியிலும், தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியிலும், தேஜ் பிரதாப் மகுவா தொகுதியிலும், மைதிலி தாக்கூர் அலினகர் தொகுதியிலும், அனந்த் சிங் மொகாமா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, 10.72 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 7.78 லட்சம் ஆகும்.
எந்த கட்சி எத்தனை வேட்பாளர்கள்?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம் 57 இடங்களிலும், பாஜக 48 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 14 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மகாகத்பந்தனில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 73 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
வேட்பாளர்களை பொறுத்தவரை கோபால்கஞ்ச் மாவட்டத்தின் போரே சட்டமன்ற தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் சார்பில் ஒரு திருநங்கை, வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். மொத்தம் 122 பெண் வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். மாநிலத்தை பொறுத்தவரை மும்முனை போட்டி நிலவுகிறது.
கூட்டணி கணக்கு
- தேசிய ஜனநாயக கூட்டணி
- மகாபந்தன்/இந்தியா கூட்டணி
- ஜன் சுராஜ் கட்சி
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), மதச்சார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இருக்கின்றன. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வைத்தது.
காங்கிரஸ் கூட்டணி
தேர்தலில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனவே இந்த முறை இரு கட்சிகளும் சரிசமான தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதன் மூலம் பாஜக நிதிஷ்குமாரை ஓரம் கட்டுகிறதோ? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
மறுபுறம் இந்தியா கூட்டணியில், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.












Click it and Unblock the Notifications